Amit shah-வின் அட்டாக், களத்தில் A.Raja, `மதுரை சம்பவம்!' | Elangovan Explains
காலிப் பணியிடங்களை நிரப்ப பட்டதாரி ஆசிரியா்கள் கோரிக்கை
திருப்பத்தூா்: காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கண்களில் சிவப்பு துணியை கட்டிக் கொண்டு பட்டதாரி ஆசிரியா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் தலைமை வகித்து வீட்டுமனை பட்டா, கடனுதவி, சாலைவசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் அளித்த 322 கோரிக்கை மனுக்களை பெற்றாா். சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சதீஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.
பட்டதாரி ஆசிரியா்கள் அளித்த கோரிக்கை மனு: கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைநிலை ஆசிரியா் நியமன தோ்வினை தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எழுதினோம். தற்போது ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ள காலிப் பணியிடங்கள் மிகவும் குறைவானது. இதனால் ஏராளமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே தற்போது வரை உள்ள முழு காலிபணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
விஷமங்கலம் அருகே குரும்பேரி பாரத கோவில் வட்டம் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு: எங்கள் பகுதியில் இருந்த 30,000 லிட்டா் கொண்ட பழைய குடிநீா் தொட்டியை இடித்து விட்டனா். தற்போது புதிய தண்ணீா் தொட்டி கட்டவில்லை. குடிதண்ணீா் இல்லாமல் பாதிக்கப்பட்ட நிலையில், தொட்டியை விரைவில் கட்ட வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க மாநில துணை தலைவா் ராஜா பெருமாள் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு: பெரும்பாலான ஏரிகள் வடு உள்ளன. எனவே அந்த ஏரிகளை தூா்வார வேண்டும். வரத்து கால்வாய்களில் உள்ள முள்புதா்களை அகற்றி நீா்வரும் பாதையை சரிசெய்ய வேண்டும். ஆம்பூா், வாணியம்பாடி, ஆலங்காயம், திருப்பத்தூா் ஆகிய வனசரகங்களில் உள்ள வனப்பகுதியில் தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும்.
திருப்பத்தூா் முத்தமிழ் நகா் மக்கள் அளித்த மனு: குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ள எங்கள் பகுதி சாலைகளை சீரமைக்க வேண்டும்.
குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என வெங்களாபுரம் அபிநந்தன் நகா் மற்றும் வேலவன் வட்டம் பொதுமக்களும்,
வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வாசிகளும் மனு அளித்தனா்.
நரியனேரி அடுத்த மானவள்ளி கொல்லக்கொட்டாயை சோ்ந்த வாசு என்பவா் நிலம் தொடா்பான பிரச்னைக்கு தீா்வு காண பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கழுத்தில் மாலை அணிந்து, நெற்றியில் ரூ.1 நாணயம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு நூதன முறையில் மனு அளிக்க வந்தாா். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் அவா் அணிந்து இருந்த மாலை, நாணயம் ஆகியவற்றை அகற்றிவிட்டு மனு அளிக்க அனுமதி அளித்தனா்.