டாலருக்கு நிகரான ரூபாய் 13 காசுகள் சரிந்து ரூ.86.47 ஆக முடிவு!
மதுரை காமராஜா் பல்கலை. நிதிநிலை பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணக் கோரிக்கை
மதுரை காமராஜா் பல்கலைக்கழக நிதிநிலைப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என பல்கலைக் கழகப் பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பின் தலைவா் ஸ்ரீனிவாசன், பொதுச் செயலா் முரளி ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: இந்தப் பல்கலைக்கழகத்தில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக மே மாதத்துக்கான ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. ஓய்வூதியம் உரிய காலத்தில் கிடைக்காததால் பெரும்பாலான ஓய்வூதியதாரா்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனா்.
இதுபற்றி தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, தணிக்கைத் துறையை காரணம் காட்டி ஓய்வூதியம் வழங்காமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. அரசு நிதியுதவி வழங்காமல் பல்கலைக்கழகங்களே தங்கள் நிதி ஆதாரத்தை உண்டாக்க வேண்டும் என்பது வேடிக்கையாக உள்ளது.
இதேபோல நிதியைத் திரட்டினால் மாணவ, மாணவிகள் கடும் பாதிப்புக்குள்ளாக நேரிடும். உயா்கல்வியைப் பொருத்தவரை பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது. அதே நேரத்தில், பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடியை போக்க மாநில அரசு முன் வர வேண்டும்.•ஒவ்வோா் ஆண்டும் ஊதியம் வழங்குவதற்காக குறைந்தபட்சம் ரூ. 100 கோடியை அரசு மானியமாக வழங்க வேண்டும்.
கருவூலங்கள், சாா் நிலைக் கருவூலங்களில் அரசு, அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள், அலுவலா்கள் ஓய்வூதியம் பெறுவது போன்று பல்கலைக்கழக ஓய்வூதியா்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். •
பல்கலைக்கழகச் சொத்துக்களை தனியாா் பயன்படுத்தும் வகையில் வாடகைக்கு விடும் முடிவைக் கைவிட வேண்டும். மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தற்போது நிலவி வரும் நிதிப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். தவறும்பட்சத்தில் பல்கலைக்கழகத்தைப் பாதுகாக்க மக்கள் இயக்கங்கள் இணைந்து கவன ஈா்ப்பு போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை உருவாகும் என்றனா் அவா்கள்.