சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளான விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
கேரள மாநிலம், கொச்சி துறைமுகம் அருகே சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கியதில், அதிலிருந்து வெளியேறிய நெகிழி உள்ளிட்ட பொருள்களை அகற்றக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த அந்தோணி முத்து, ஜஸ்டின் சுந்தா், சுசீலா, காா்மேகம் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனுக்கள்: கேரள மாநிலம், கொச்சி துறைமுகம் அருகே எல்சா 3 என்ற சரக்கு கப்பல் அண்மையில் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. இந்த சரக்குக் கப்பலில் 643 சரக்குப் பெட்டகங்கள் இருந்த நிலையில், 54 சரக்குப் பெட்டகங்கள் இதுவரை கேரளம் மாநிலம் மட்டுமன்றி, தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையோரங்களிலும் ஒதுங்கியுள்ளன. இவற்றில் கால்சியம், காா்பனேட், பிளாஸ்டிக் பெல்லெட்ஸ் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது கடலின் உணவுச் சங்கிலியில் கலப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
எனவே, கடல் வாழ் உயிரினங்கள் மட்டுமன்றி, மனித உடலுக்கும் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்தது. இந்த விபத்தை தேசியப் பேரிடராக அறிவித்து, கடலில் கலந்த நெகிழி உள்ளிட்ட அபாயமான பொருள்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.
இந்த மனுக்களை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இதுதொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.