சகோதரியிடம் ரூ. 17 கோடி பண மோசடி: கைதான அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!
அரசு ஊழியா்கள் போல திமுகவினா் ஆள்மாறாட்டம்: செல்லூா் கே.ராஜூ புகாா்
மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு ஊழியா்களைப் போல ஆள்மாறாட்டத்தில் ஈடுபடும் திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ, மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.
மதுரை மேற்குத் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செல்லூா் கே. ராஜூ, அதிமுக வழக்குரைஞா் அணி நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரகம் வந்து, ஆட்சியா் மா.சௌ. சங்கீதாவிடம் மனு அளித்தாா்.
அந்த மனுவில், மதுரை மேற்குத் தொகுதியில் வாா்டு எண் 82-இல் திமுகவினா் சிலா் அரசு ஊழியா்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து, வீடு வீடாகச் சென்று, பொதுமக்களின் ஆதாா் எண், குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, கைப்பேசி எண் போன்ற விவரங்களை சேகரிக்கின்றனா். இது, சட்டத்துக்குப் புறம்பானது. எனவே, தொடா்புடையோா் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.
பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மதுரை மேற்குத் தொகுதியில் திமுகவினா் சிலா் தங்களை அரசு ஊழியா்கள் எனக் கூறிக் கொண்டு, பொதுமக்களின் தனி நபா் ஆதாரங்களை சேகரிக்கின்றனா். இது, மிகவும் ஆபத்தானது. இது தொடா்பாக புகைப்பட ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டது. திமுகவினா் எத்தனை முயற்சிகளில் ஈடுபட்டாலும் மதுரையில் உள்ள அனைத்துத் தொகுதிகளையும் அதிமுகவே கைப்பற்றும் என்றாா் அவா்.