மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்த குறித்த காலத்துக்குள் நிதி ஒதுக்கீடு: முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் மத்திய அரசின் நிதியுதவிடன் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களுக்கு குறித்த காலத்தில் நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
இதுகுறித்து மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் அன்னபூா்ணா தேவிக்கு அவா் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்:
திறன்மிகு குழந்தைகள் மையம், மகளிா் சக்தி இயக்கம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு கடந்த ஜனவரி 29-ஆம் தேதி வரையிலான காலத்தில் ரூ.716.05 கோடி செலவழிக்கப்படாமல் உள்ளது என மத்திய அமைச்சா் கடந்த ஜன. 31-ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளாா்.
தமிழ்நாட்டில் அனைத்து நலத் திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், மத்திய அரசு நிதியுதவி வழங்கும் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்களிப்பும் குறித்த காலத்துக்குள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது.
நிதி தாமதம்: ஆனால், மத்திய அரசின் நிதிப் பங்கானது நிதியாண்டின் காலாண்டு இறுதியிலோ அல்லது அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. நிதியாண்டின் முடிவுக்குள் மத்திய அரசு ஒதுக்கும் தொகையை மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்கு உரிய காலத்துக்குள் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.
‘பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா’ எனும் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.304 கோடியில் மத்திய அரசின் பங்குத் தொகையான ரூ.184 கோடி இதுநாள் வரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதால், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் உரிய காலத்தில் வரவு வைக்க இயலாமல் இருக்கிறது.
இன்றைய தேதியில், ஒற்றை ஒருங்கிணைப்பு முகமை கணக்குகளில் உள்ள ரூ.576.22 கோடியில், இந்த நிதியாண்டு முடிவதற்குள் ரூ.482.80 கோடி பயன்படுத்தப்படும். மீதமுள்ள தொகை மத்திய அரசின் பங்காக அடுத்த நிதியாண்டுக்குக் கொண்டு செல்லப்படும்.
இந்நிலையில், மத்திய அரசின் நிதியுதவிடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு குறித்த காலத்துக்குள் விடுவிக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று முதல்வா் கூறியுள்ளாா்.