மத்திய கிழக்கு பதற்றம்: டிரம்ப்-புதின் பேச்சு
இஸ்ரேல்-ஈரான் மோதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றமான சூழல் குறித்து அமெரிக்க அதிபா் டிரம்ப், ரஷிய அதிபா் புதின் ஆகியோா் தொலைபேசியில் சனிக்கிழமை பேசினா்.
இதுதொடா்பாக ரஷிய தலைநகா் மாஸ்கோவில் அதிபா் புதினின் உதவியாளா் யூரி உஷகோவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: டிரம்ப்-புதின் இடையே சுமாா் 50 நிமிஷங்கள் உரையாடல் நடைபெற்றது. அப்போது இஸ்ரேல்-ஈரான் தலைவா்களுடன் தான் அண்மையில் பேசியது குறித்து டிரம்ப்பிடம் புதின் விவரித்தாா். ஈரான் அணுசக்தி விவகாரத்தில் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீா்வை எட்ட வேண்டும் என்ற ரஷியாவின் பரிந்துரையை டிரம்ப்பிடம் புதின் மீண்டும் வலியுறுத்தினாா்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் சூழல் மிகவும் அபாயகரமாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்த நிலையில், ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறுவதற்கான சாத்தியம் இருப்பதை அவா்கள் மறுக்கவில்லை என்றாா்.