மனநல நிறுவனங்கள் பதிவு செய்ய அறிவுறுத்தல்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் மனநல நிறுவனங்கள், தமிழ்நாடு மனநல ஆணையத்தில் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டிற்கு ஆளானவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட மனநல நிறுவனங்கள்/மையங்கள் அனைத்தும் மனநல பராமரிப்பு சட்டம் 2017-இன்படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இவ்வாறு பதிவு பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் உரிய முறையில் முதன்மை செயல் அலுவலா், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் பதிவு செய்ய ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்தோ அல்லது தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பெற்று ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-26420965 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.
அவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறினால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.