"மலிவான அரசியல் செய்கிறார்; ஆளுநர் இங்கேயே இருக்கட்டும்..!" - முதல்வர் ஸ்டாலின்
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் புதிய திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் தர்மபுரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "வரலாற்று சிறப்புமிக்க ஒகேனக்கல் உள்ள தருமபுரி மாவட்டத்தில் ரூ.512.52 கோடி மதிப்பில் 1,044 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைப்பதுடன், ரூ.362.77 கோடியில் முடிவுற்ற 1073 திட்டப் பணிகளை வழங்கி உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவிலே முதல் முறையாக வேளாண் திட்டத்தில், நேரடியாக கடன் பெறும் நடைமுறையை மாற்றி, இணைய வழியில் பயிர் கடன் பெறுதல், திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறோம். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் பஞ்சத்தை போக்க ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.1,928 கோடி ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் வழங்கப்பட்டது. இதன் இரண்டாம் கட்டம் ரூ.7200 கோடி மதிப்பில் தொடங்கப்படுகிறது. திமுக ஆட்சியில் பெரும்பாலை அகழாய்வு, ஏரியூரில் அரசு கலைக் கல்லூரி, ஒகேனக்கல் சுற்றுலா மேம்பாடு செய்தல், வத்தல் மலைக்கு முதன் முதலாக பேருந்து வசதி உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை வழங்கியிருக்கிறோம். இன்று தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கையான சிப்காட் தொழிற்பூங்கா தொடங்கப்பட்டது. இதில் இணைய தளம் மூலம் 200 ஏக்கர் நிலம் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு, 7 தொழில் நிறுவனங்களுக்கு ஆணை வழங்கப்படுகிறது" என்றார்.

தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்திற்கு புதிய திட்டங்களை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதில் சிதாதேரி ஊராட்சி, கொளகம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிசெட்டிப்பாளையம், பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தில் இருந்து, அரூர் வட்டத்தில் இணைப்பு. ஒகேனக்கல் - தருமபுரி சாலை 162 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை யாக இரண்டு கட்டமாக அமைக்கப்படும். நல்லம்பள்ளி அரசு மேல்நிலை பள்ளி 7.50 கோடி மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடம். தருமபுரியில் ஒருங்கிணைந்த புளி வணிக மையம். அரூர் பகுதியில் வள்ளிமதுரை அணையிலிருந்து, ரூ.15 கோடி மதிப்பில் மேல்நிலைப் நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்படும் என்று கூறினார்.

`மலிவான அரசியல் செய்கிறார் ஆளுநர் ரவி. தமிழ்நாட்டு மாணவர்களை இழிவுப்படுத்துவார். இல்லாத திருக்குறளை சொல்லுவார். இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் என்று ஒன்றிய பாஜக அரசின் புள்ளி விவரம் சொல்கிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுநர் அவதூறை பரப்புகிறார். பெண்களுக்கு பாதுகாப்பில்லை என ஆளுநர் சொல்கிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர் கம்பு சுற்ற வேண்டும். அது தமிழ்நாட்டில் இல்லை. ஆளுநர் இங்கேயே இருக்க வேண்டும். நமக்குள்ள மொழிப்பற்றை, இனப்பற்றை காப்பாற்ற, இறுகப்பிடிக்க ஆளுநர் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உங்களுடன் ஸ்டாலின், தாயுமானவன் திட்டத்தை பற்றி நான் சொல்ல தேவையில்லை. அதற்கு நீங்களே தூதுவராக இருக்கிறீர்கள்" என்றார்.