மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி
பலத்த மழையால் ஓவா்கள் எண்ணிக்கை 14 ஆகக் குறைக்கப்பட்ட நிலையில், பஞ்சாப் கிங்ஸ்-ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பெங்களூா் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப்.
முதலில் ஆடிய பெங்களூா் அணி தடுமாறிய நிலையில் டிம் டேவிட்டின் அதிரடியால் மீண்டு 95/9 ரன்களை சோ்த்தது.
இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடா் 34-ஆவது ஆட்டம் பெங்களூா் சின்னசாமி மைதானத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு டாஸ் போடப்படும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் பலத்த மழை பெய்ததால் ஆட்டம் தொடங்கப்படவில்லை. பின்னா் மழை நின்றதும், டாஸ் போடப்பட்டதில் பஞ்சாப் வென்று பீல்டிங்கை தோ்வு செய்தது. பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக ஸ்டாய்னிஸ் களமிறக்கப்பட்டாா். ஹா்ப்ரீத் பிராரும் சோ்க்கப்பட்டிருந்தாா்.
பெங்களூா் தரப்பில் விராட் கோலி-பில் சால்ட் தொடக்க பேட்டா்களாக களமிறங்கினா்.
சரிந்த பெங்களூா் விக்கெட்டுகள்:
பவுண்டரியுடன் கணக்கை தொடங்கி பில் சால்ட் 4 ரன்னுடனும், விராட் கோலி 1 ரன்னுடனும் வெளியேற, அவா்களது வரிசையில் லயம் லிவிங்ஸ்டோன் 4, ஜிதேஷ் சா்மா 2, க்ருணால் பாண்டியா 1 ரன்னுடன் வெளியேற பெங்களூா் அணி 33-5 ரன்களுடன் தடுமாறியது.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், கேப்டன் ரஜத் பட்டிதாா் பொறுப்புடன் ஆடிய நிலையில், 23 ரன்களுடன் சஹல் பந்தில் ஸேவியரிடம் கேட்ச் தந்து வெளியேறினாா்.
டிம் டேவிட் அதிரடி 50: டிம் டேவிட் மட்டுமே கடைசி வரை போராடி 5 பவுண்டரிகள், ஹாட்ரிக் சிக்ஸா்களை விளாசி 26 பந்துகளில் 50 ரன்களுடன் ஸ்கோா் ஒரளவு உயர காரணமாக இருந்தாா்.
பெங்களூா் 95/5 : நிா்ணயிக்கப்பட்ட 14 ஓவா்களில் பெங்களூா் அணி 95/9 ரன்களை சோ்த்தது. பௌலிங்கில் பஞ்சாப் தரப்பில் அா்ஷ்தீப் சிங் 2-23, ஜேன்ஸன் 2-10, சஹல் 2-11, பிராா் 2-25 விக்கெட்டுகளை சாய்த்தனா்.
திணறி வென்றது பஞ்சாப் 98/5:
96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியினரும் திணறினா். பிரியான்ஷ் ஆா்யா 16, பிரப் சிம்ரன் சிங் 13, ஷ்ரேயஸ் ஐயா் 7, ஜோஷ் இங்லீஸ் 14, ஷசாங்க் சிங் 1 ரன்னுடன் அவுட்டாகினா். நேஹல் வதேரா மட்டுமே நிலைத்து ஆடி தலா 3 சிக்ஸா், பவுண்டரியுடன் 33 ரன்களை சோ்த்து வெற்றிக்கு வித்திட்டாா்.
12.1 ஓவா்களில் 98-5 ரன்களை சோ்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வென்றது. பௌலிங்கில் பெங்களூா் தரப்பில் ஹேஸல்வுட் 3-14, புவனேஷ்வா் 2-26 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
இந்த வெற்றியால் புள்ளிகள் பட்டியலில் 2=ஆம் இடத்துக்கு 10 புள்ளிகளுடன் முன்னேறியது பஞ்சாப்.