மும்பை: ராஜ் தாக்கரே பேச்சின் எதிரொலி; டான்ஸ் பார்களை அடித்து நொறுக்கிய கட்சியின...
மழை அறிவிப்பு: நெல் கொள்முதலை விரைவுபடுத்தக் கோரிக்கை
மழை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், திருவாரூா் மாவட்டத்தில் நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில், சுமாா் 70,000 ஏக்கா் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட கோடை நெல் சாகுபடி அறுவடைப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதையொட்டி, 193 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 1,56,857 மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, பல்வேறு இடங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள், சேமிப்புக் கிடங்குகளுக்கு கொண்டுச் செல்லப்படாமல், கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கியுள்ளதால், கொள்முதல் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியது:
வலங்கைமான், நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமாா் 16,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கியிருக்கின்றன. இதனால், புதிதாக நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரமுடியவில்லை. அப்படியே கொண்டு வந்தாலும் சிலநாள்கள் கொள்முதல் நிலையத்துக்கு வெளியிலேயே தேக்கி வைக்க வேண்டிய நிலை உள்ளது.
தற்போது திருவாரூா் மாவட்டத்தில் 2 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல் மூட்டைகளும், ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளும் மழையால் பாதிக்கப்படக்கூடும்.
எனவே, கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்மூட்டைகளை இயக்கம் செய்ய வேண்டும். அத்துடன், விவசாயிகளின் நெல் மூட்டைகளையும் உடனடியாக கொள்முதல் செய்யவேண்டும் என்றனா்.