செய்திகள் :

மாநிலக் கல்விக் கொள்கையை இன்னும் வெளியிடாதது ஏன்? எப்போது நடைமுறைக்கு வரும்? - ராமதாஸ்

post image

தமிழ்நாட்டில் மாநிலக் கல்விக் கொள்கையை இன்னும் வெளியிடாதது ஏன்? என திமுக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் கீழான கடைசி கல்வியாண்டு இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ள நிலையில்,  3 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கை இன்று வரை வெளியிடப்படவில்லை. தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசு உருவாக்கி 2020-ஆம் ஆண்டில் வெளியிட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கையில் தாய்மொழி வழிக் கல்வி உள்ளிட்ட வரவேற்கப்பட வேண்டிய பல அம்சங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அது மாணவர்களின் இடைநிற்றலுக்கு வழி வகுக்கும் என்பதால் அதை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை.

கிட்டத்தட்ட இதே நிலைப்பாட்டை எடுத்த தமிழக அரசு, மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கு மாறாக தமிழகத்தின் சூழலுக்கு பொருந்தும் வகையில் மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கப்படும் என்று 2022-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டில் மாநிலக் கல்விக் கொள்கையை வகுப்பதற்காக நீதியரசர் டி.முருகேசன் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

நீதியரசர் முருகேசன் குழுவால் தயாரிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை கடந்த ஆண்டு ஜூலை ஒன்றாம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு நினைத்திருந்தால்  உடனடியாக அதை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு, கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளைக் கேட்டறிந்து  மாநிலக் கல்விக் கொள்கையை இறுதி செய்து வெளியிட்டிருக்கலாம். ஆனால்,  தமிழக அரசு அதை செய்யவில்லை. அதற்கான காரணம் என்னவென்றும் புரியவில்லை.

மாநிலக் கல்விக் கொள்கையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை வலியுறுத்தியுள்ளது. ஆனாலும், அதன் மீது தமிழக அரசு எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளவில்லை. திமுக அரசின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடையவுள்ளது. அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்களில் மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்படாவிட்டால், அதனால் எந்த பயனும் இல்லை; அதை குப்பையில்தான் போட்டாக வேண்டும். இதற்காகவா மக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாயை செலவு செய்து மாநிலக் கல்விக் கொள்கையை தமிழக அரசு தயாரித்தது?

மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிடாமல் இருக்க நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. அப்படியிருந்தும் மாநிலக் கல்விக் கொள்கையை  நடைமுறைப்படுத்த தமிழக அரசு தாமதிக்கிறது என்றால், தேசியக் கல்விக் கொள்கை தமிழகத்தில் செயல்படுத்தப்படுவதற்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறது என்றுதான் கருத வேண்டியிருக்கும்.  இப்போதும் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில்  தேசியக் கல்விக் கொள்கையின் பல அம்சங்களை செயல்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது இந்த ஐயம் உறுதியாகிறது.

மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பான விஷயத்தில் தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும். மாநிலக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவதுதான்  திமுக அரசின் நிலைப்பாடு என்றால் ஓராண்டாகியும் வரைவு அறிக்கையை வெளியிடாதது ஏன்?  மாநிலக் கல்விக் கொள்கை எப்போது முதல் நடைமுறைக்கு வரும்? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு தமிழக அரசு  உடனடியாக விடையளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | நாட்டில் கரோனா பாதிப்பு 1,000-யைத் தாண்டியது! மாநில வாரியாக விவரம்!!

ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகள் மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது என தமிழ்ந... மேலும் பார்க்க

வெடிகுண்டு இருக்குமோ..?: கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு!

கோவை: கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது.இந்தியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுத... மேலும் பார்க்க

தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படுமா? இபிஎஸ் தலைமையில் அதிமுக ஆலோசனை!

மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்கள், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமு... மேலும் பார்க்க

நடிகர் ராஜேஷ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தமிழ்த் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைவிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,தமிழ்த் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைந்த செய்தியறிந்த... மேலும் பார்க்க

காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ள நிலையில், சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வடமேற்கு மற்று... மேலும் பார்க்க

கலையை கலையாகப் பார்க்கக்கூடிய அறச்சிந்தனை கன்னட அமைப்புகளுக்கு இல்லையே ஏன்?: - சீமான் கேள்வி

வரலாற்று பேருண்மையை கூறியதற்காக கமல்ஹாசனை மிரட்டும் கன்னட அமைப்புகளுக்கு கலையை கலையாகப் பார்க்கக்கூடிய அறச்சிந்தனை இல்லையே ஏன்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சீம... மேலும் பார்க்க