வெள்ளத்தில் மிதக்கும் கேரளம்: விரைந்தது தேசிய பேரிடர் மீட்புக் குழு!
நகைக்கடன் புதிய விதிகளை தளர்த்த நிதியமைச்சகம் பரிந்துரை!
தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் தளர்வு அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
தங்க நகைக் கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதிநிறுவனங்களுக்கு புதிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதில், வங்கி அடமானம் வைக்கப்படும் தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன், நகைக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும், நகைக்கான தரம், தூய்மை குறித்த சான்று வழங்க வேண்டும் போன்ற கடுமையான விதிமுறைகள் அடங்கும்.
நகைக் கடனில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்கும் வகையில், புதிய விதிகள் கொண்டுவரப்படுவதாக ரிசா்வ் வங்கி கூறினாலும், இவை எளிய நடுத்தர குடும்பங்கள் மத்தியில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக பல்வேறு தரப்பினர் விமர்சனத்தை முன்வைத்தனர்.
மேலும், நகைக்கடனுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் விதிகளில் சில தளர்வுகள் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதாவது, குறுகிய தொகை நகைக்கடன் பெறும் மக்கள் பாதிக்கப்படாதவாறு, ரூ. 2 லட்சத்துக்கும் குறைவான நகைக் கடன் பெறுபவர்களுக்கு புதிய விதிகளில் இருந்து தளர்வு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய விதிமுறைகளை அமல்படுத்த சிறிது அவகாசம் வழங்கி ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தலாம் என்று மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
முன்னதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், விவசாயிகளின் 2 லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன்களுக்கு தங்க நகைகளை ஈடாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.