டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி...
அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் கட்டைவிரலை வெட்டிய செவிலியர்!
வேலூர்: வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு குளுக்கோல் மற்றும் மருந்து செலுத்துவதற்காக கையில் போடப்பட்டிருந்த டேப்பை மாற்றும் போது குழந்தையின் கை கட்டைவிரலை செவிலியர் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் முள்ளிபாளையத்தை சேர்ந்தவர்கள் விமல்ராஜ் (30)- நிவேதா (24) தம்பதியினர். நிறைமாத கர்ப்பிணியான நிவேதாவிற்கு கடந்த 24 ஆம் தேதி அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், குழந்தையின் கையில் குளுக்கோஸ் மற்றும் மருந்து செலுத்துவதற்காக போடப்பட்டிருந்த ஊசியை செவிலியர்கள் மாற்றுவதற்காக குழந்தையின் வலது கையில் ஒட்டப்பட்டு இருந்த டேப்பை கைகளிநால் பிரித்து எடுக்காமல் கத்தரிக்கோளை பயன்படுத்தி நீக்கும்போது எதிர்பாராத விதமாக குழந்தையின் வலது கை கட்டைவிரலை வெட்டியுள்ளனர். பச்சிளம் குழந்தை வலித்தாங்க முடியாமல் கத்தியுள்ளது. இதனை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் செவிலியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க |75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் தமிழக அரசு தகவல்
இதனைத்தொடர்ந்து பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் மக்கள் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.
இதையடுத்து வேலூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் குழந்தையின் கையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் மற்றும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.