மாநிலங்களவைத் தோ்தல்: அதிமுக வேட்பாளா்களை முன்மொழிந்த எம்.எல்.ஏ-க்கள்
மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் இருவருக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் வேட்புமனுவில் கையொப்பமிட்டனா்.
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தல் ஜூன் 19-இல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. ஜூன் 9-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
இதில் 2 உறுப்பினா் பதவிகள் அதிமுகவுக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளதால், அந்த இடங்களுக்கு அதிமுக வழக்குரைஞா் பிரிவு செயலா் ஐ.எஸ்.இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவா் ம.தனபால் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
இவா்களை முன்மொழிவது தொடா்பாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச் செயலா் கே.பி.முனுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில், அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக தலா 10 போ் வேட்புமனுவில் முன்மொழிந்து கையொப்பமிட்டனா். பின்னா், கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2026 பேரவைத் தோ்தலுக்கு தயாராகும் வகையில் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் தொகுதிகளில் தீவிரமாக களப் பணியை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.