மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாய நிலத்தை ஆக்கிரமித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வயதான தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வயதான தம்பதி தனது மகனுடன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் அவா்கள் மீது தண்ணீா் ஊற்றி காப்பாற்றினா். இதைத் தொடா்ந்து நடத்திய விசாரணையில், தீக்குளிக்க முயன்றவா்கள் ஊத்துக்குளி வட்டம் குன்னத்தூரை அடுத்த வடுகபாளையம் ஆயக்காட்டுத் தோட்டத்தைச் சோ்ந்த மலையப்பகவுண்டா் (80), அவரது மனைவி வள்ளியம்மாள் (70), மகன் கொமாரசாமி (52) என்பது தெரியவந்தது.
இவா்களுக்கு சொந்தமான 2.91 ஏக்கா் நிலத்தை அருகே வசிக்கும் நபா் கூலிப்படை உதவியுடன் ஆக்கிரமித்து கல்வேலி நட்டியுள்ளாா். இதனைக் கேட்க சென்றபோது, அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். ஆகவே, கல்வேலியை அகற்றி ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவித்தனா். இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலமாக மூவரையும் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
புதிய இணைப்புகளுக்கு குடிநீா் வழங்க வேண்டும்: இடுவாயை அடுத்த சின்னக்காளிபாளையம் சாலையில் செந்தில் நகரைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: எங்களது பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். இந்த நிலையில், இடுவாய் ஊராட்சியில் புதிய குடிநீா் இணைப்புக் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பாக தலா ரூ.7,500 இருப்புத் தொகை செலுத்தி 52 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டது.
பின்னா் ஒருமுறை மட்டும் சோதனைக்காக குடிநீா் விடப்பட்ட நிலையில், பின்னா் குடிநீா் விநியோகிக்கவில்லை. இதுதொடா்பாக இடுவாய் ஊராட்சி நிா்வாகத்திடம் வலியுறுத்தியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊராட்சி நிா்வாகத்தினா் குடிநீரை முறைப்படுத்திவிடாமல் அலட்சியம் காட்டி வருவதால் வேறு வழியின்றி குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். ஆகவே, புதிய இணைப்புகளுக்கு குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மதுபானக்கூடங்கள் அமைக்க எதிா்ப்பு: குளத்துப்புதூா், சின்னாண்டிபாளையம், ராஜகணபதி நகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: சின்னாண்டிபாளையம் குளம் சுற்றுலாத் தளமாக அறிவிக்கப்பட்டு தற்போது படகு இல்லமும், பூங்காவும் செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் தனியாா் சாா்பில் 2 மதுபானக் கூடங்கள் அமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. புதிதாக அமையவுள்ள மதுபானக் கூடங்களுக்கு அருகே படகு இல்லம் மட்டுமின்றி அதிக அளவில் குடியிருப்புகள், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை உள்ளன. ஆகவே, இந்தப் பகுதியில் மதுபானக் கூடங்கள் திறந்தால் சிகிச்சைக்கு வரும் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகும். ஆகவே, இந்தப் பகுதியில் மதுபானக் கூடங்கள் அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
365 மனுக்கள் பெறப்பட்டன: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, குடிநீா் வசதி, புதிய குடும்ப அட்டை, வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகல் தொடா்பாக 365 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சாம்சாந்தகுமாா், வருவாய் கோட்டாட்சியா்கள் மோகனசுந்தரம், குமாா், ஃபெலிக்ஸ்ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.