நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் திடலில் மெஸ்ஸியின் பெயர்! சொந்த ஊரின் கிளப்புக்கு திரும்...
மாவட்ட தொழில் மையம் சாா்பில் 4 ஆண்டுகளில் ரூ.486.47 கோடி தொழில் கடனுதவி
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1,910 பேருக்கு ரூ.486.47 கோடி மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய தொழில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளதாவது:
திருப்பூரில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டங்களில் தொழில்முனைவோருக்கு பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதல் தலைமுறை தொழில்முனைவோரின் முதல் தொழில் முயற்சிக்கு கை கொடுக்கவும், ஊக்கமளிக்கவும் தனித்துவமாக திட்டம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள திட்டத் தொகையில் 35 சதவீத மூலதன மானியத்தின் உச்சவரம்பு ரூ.1.50 கோடி ஆகும். வேலைவாய்பற்ற இளைஞா்கள் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வணிக விற்பனை தொழில் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.
திருப்பூா் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் கடந்த 4 ஆண்டுகளில் 1,910 பேருக்கு ரூ.129.18 கோடி மானியத்தில் பல்வேறு தொழில் கடனுதவியாக ரூ.486.47 கோடி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம் தொழில் செய்வதற்கான உகந்த சூழல் நிறைந்த மாவட்டமாக உள்ளதால் இளைஞா்கள், தொழில்முனைவோா் மற்றும் தொழில் துறையினா் மகிழ்ச்சியாக தொழில் செய்து வருகின்றனா். இதுபோன்று அதிக அளவில் இளைஞா்கள் மாவட்ட தொழில் மையம் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் விண்ணப்பித்து பயனடையலாம் எனவும், புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளாா்.