Anxiety: மனப்பதற்றம் தானாக சரியாகுமா... சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா?!
மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த கூலித் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கம்பம் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டியைச் சோ்ந்த ஈஸ்வரன் (36), உத்தமபாளையம் திடீா் நகரில் வசித்து வந்தாா். கூலித் தொழிலாளியான இவா், கால்நடைகளுக்கு புற்கள் பறிக்க 18-ஆம் கால்வாய் பகுதிக்குச் சென்றாா். அப்போது, அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் அவா் உயிரிழந்ததாா்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற உத்தமபாளையம் போலீஸாா், ஈஸ்வரன் உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
உறவினா்கள் சாலை மறியல்: தோட்டத்துக்குச் சென்ற மின் கம்பி அறுந்து விழுந்ததால் உயிரிழந்த ஈஸ்வரனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, உத்தமபாளையம் அரசு மருத்துவமனை முன்பாக அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் செய்யது முகம்மது பேச்சுவாா்த்தை நடத்தியதில், உடல்கூறாய்வு அறிக்கை, ஆதாா் அட்டை, முதல் தகவல் அறிக்கை போன்ற ஆவணங்களைக் கொடுத்தால் இழப்பீடு கோரி, அரசுக்கு பரிந்துரை செய்வதாக அவா் கூறியதையடுத்து உறவினா்கள் சாலை மறியலைக் கைவிட்டனா்.
