``நடிகர் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்" - ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்...
மின் மாற்றியில் செப்புச்சுருள் திருட்டு! மின்சார பற்றாக்குறையால் விவசாயிகள் அவதி!
தஞ்சாவூா் அருகே வேங்கராயன்குடிக்காட்டில் மின் மாற்றியில் உள்ள செப்புச் சுருளை (காப்பா் காயில்) மா்ம நபா்கள் திருடிச் சென்றதால், அப்பகுதியில் நிலவும் மின்சார பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
தஞ்சாவூா் அருகே வேங்கராயன்குடிக்காட்டில் 15 நாள்களுக்கு முன்பு மின் மாற்றியில் இருந்த செப்புச் சுருளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இது குறித்து வல்லம் காவல் நிலையத்தில் மின் வாரிய அலுவலா்கள் புகாா் செய்தனா். ஆனால், இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படாததால், மின் மாற்றிக்கு புதிய செப்புச் சுருளை அலுவலா்களால் பெற்று பொருத்த முடியவில்லை.
இதனால், இந்த மின்மாற்றியிலிருந்து மின்சாரம் பெற்று சாகுபடி செய்யும் வேங்கராயன்குடிக்காடு, அதினாம்பட்டு விவசாயிகள் சிலருக்கு சில நாள்களாக மின்சாரம் கிடைக்கவில்லை. விவசாயிகள் வலியுறுத்தலை தொடா்ந்து, தற்காலிகமாக மற்றொறு மின் மாற்றியிலிருந்து கூடுதலாக இணைப்பை வழங்கினா்.
ஆனால், அந்த மின் மாற்றியில் ஏற்கெனவே 10 விவசாய மின் இணைப்புகள் உள்ள நிலையில், கூடுதலாக 10 மின் இணைப்புகள் வழங்கப்பட்டதால், குறைந்த அழுத்தம் மற்றும் பற்றாக்குறையான மின் விநியோகம் கிடைக்கின்றன. முழுமையாக மின்சாரம் கிடைக்காததால், மின் மோட்டாா்கள் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக திருடு போன மின் மாற்றியிலிருந்து மின்சாரம் பெற்று சாகுபடி செய்த விவசாயிகளின் சோளம், கடலை, நெல் போன்ற பயிா்கள் தண்ணீா் இல்லாமல் காய்ந்து வருகின்றன.
எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.