முருக பக்தா்கள் மாநாட்டில் அரசியல் பேசவில்லை: நயினாா் நாகேந்திரன்
முதல் டெஸ்ட்டில் எங்கு தவறு செய்தது இந்திய அணி? அஸ்வின் கூறுவதென்ன?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்திடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்திய அணியில் ஐந்து சதங்கள் அடித்தும் (இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து) இங்கிலாந்தின் வெற்றியை தடுக்க முடியவில்லை. லீட்ஸில் 371 ரன்களை துரத்திப் பிடித்தது, இங்கிலாந்து அணியால் டெஸ்ட் போட்டிகளில் துரத்திப் பிடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச இலக்காகும்.
அஸ்வின் கூறுவதென்ன?
5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் நீண்ட நேரம் களத்தில் நிலைத்து நின்று விளையாட வேண்டும் எனவும், ரிஷப் பந்த் அவரது சதங்களை கண்டிப்பாக இரட்டைச் சதங்களாக மாற்ற வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் அவர் பேசியதாவது: இந்திய அணி அவர்களது பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு இன்னிங்ஸிலும் அதிக நேரம் களத்தில் நிலைத்து நின்று விளையாட வேண்டும். இங்கிலாந்து அணி வீரர்கள் அதிக நேரம் ஃபீல்டிங் செய்யும் அளவுக்கு இந்திய அணி விளையாட வேண்டும். இந்திய அணி பயப்படத் தேவையில்லை எனக் கூறுவேன். அடுத்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சமநிலைக்கு வரலாம். ஆனால், இங்கிலாந்து அணி பயன்படுத்தும் யுக்திகளை புரிந்துகொள்ளாவிட்டால், இந்த தொடரை நாம் விரைவில் இழந்துவிடுவோம்.
முதல் டெஸ்ட்டின் நான்காம் நாளில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் விரைவில் ஆட்டமிழந்துவிட்டது. அங்கிருந்து போட்டி நமது கைகளில் இருந்து நழுவிச் சென்றது. ஐந்தாம் நாள் வரை பேட்டிங்கை எடுத்துச் செல்லவில்லையென்றால், ஆட்டம் இங்கிலாந்துக்கு சாதகமாக மாறிவிடும். இலக்கு எதுவாக இருந்தாலும் வெற்றி பெறும் நோக்கத்திலேயே விளையாடுவோம் என இங்கிலாந்து அணி வெளிப்படையாக தெரிவித்துவிட்டது. அதனால், இந்திய அணி இங்கிலாந்துக்கு குறைந்த நேரத்தில் அதிக ரன்கள் குவிப்பதை இலக்காக நிர்ணயிக்க வேண்டும். கடைசி நாளில் இங்கிலாந்துக்கு வெற்றி இலக்கு நிர்ணயிக்க விரும்பினால், இந்திய அணி அவர்களுக்கு குறைந்தது 400 அல்லது 450 ரன்களை இலக்காக நிர்ணயிக்க வேண்டும். குறைந்த நேரத்தில் 450 ரன்கள் இலக்கு என்பது இங்கிலாந்துக்கு எதிராக சரியாக இருக்கும்.
ரிஷப் பந்த்தினை விராட் கோலி போன்ற வீரர்களுடன் ஒப்பிடப்பட வேண்டும். அவர் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களைப் போன்றவர். ஏனெனில், ஆட்டத்தில் அவருக்கு அதிக நேரம் கிடைக்கும். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே சிறப்பாக ரன்கள் குவிக்கும் திறன் ரிஷப் பந்த்துக்கு இருக்கிறது. பேட்ஸ்மேனாக ரிஷப் பந்த் சிறப்பாக செயல்படலாம். அவரிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். அடுத்த முறை நீங்கள் 130 ரன்களில் பேட்டிங் செய்யும்போது, அதனை தயவுசெய்து இரட்டைச் சதமாக மாற்றுங்கள்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வேண்டும். இங்கிலாந்து அணி அவரை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை பார்க்க விரும்புகிறேன். குல்தீப் யாதவ் 100 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிந்தாலும், இந்திய அணிக்கு 125 ரன்கள் போன்ற முன்னிலை கிடைத்திருக்கும். குல்தீப் யாதவ் முதல் போட்டியில் விளையாடியிருந்தால், போட்டி வித்தியாசமாக இருந்திருக்கும் என்றார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 2 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
summary
India should focus on extending their batting time and Rishabh pant must convert his hundreds into double centuries against an "average" England attack in the ongoing Test series.
இதையும் படிக்க: இந்தியா - ஆஸி. தொடருக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!