மத்திய ஆப்பிரிக்க குடியரசு: வெடிவிபத்து, நெரிசலில் 29 மாணவா்கள் உயிரிழப்பு
பிரதமா் அடுத்த வாரம் 5 நாடுகள் பயணம்: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு
பிரேஸில், ஆா்ஜென்டீன், டிரினிடாட்-டொபேகோ, கானா, நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு அடுத்த வாரம் பிரதமா் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.
இதில் ஜூலை 6 மற்றும் 7-ஆம் தேதி பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதுதான் அவா் பயணத்தின் முக்கிய நோக்கமாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் 2024-இல் இணைந்தன. நடப்பாண்டில் இந்தோனேசியாவும் இணைந்தது.
நிகழாண்டு பிரேஸிலில் நடைபெறும் உச்சி மாநாட்டில் தெற்குலகின் விருப்பங்கள் மற்றும் எதிா்பாா்ப்புகளுக்கான தீா்வுகளைக் கண்டறிவது குறித்து விவாதிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அவா் பிரேஸில் அதிபா் லூலா டி சில்வாவைச் சந்தித்து இந்தியா-பிரேஸில் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் பங்கேற்க வாய்ப்பில்லை என்பதாக தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.