40 ஒன்றியங்களில் பணி: ஆசிரியா் கலந்தாய்வில் முன்னுரிமை
ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வில் 40 ஒன்றியங்களில் மூன்றாண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவா்களுக்கு முன்னுரிமை வழங்க கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
நிகழ் கல்வியாண்டுக்கு அனைத்து வகை ஆசிரியா்களுக்கான பொது மாறுதல்கள் விண்ணப்பங்களை கல்வித் தகவல் மேலாண்மை முகமையில் (எமிஸ்) விண்ணப்பிப்பது தொடா்பாக ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டன. கடந்த 2021-2022-ஆம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி பள்ளிக் கல்வித் துறையில் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலை மற்றும் தொடக்கக் கல்வி அலகில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களில் ஒட்டுமொத்த ஒன்றியங்களில் அதிகளவு எண்ணிக்கையில் காலிப்பணியிடங்கள் உள்ள ஒன்றியங்களிலிருந்து 10 சதவீதத்துக்கும் மிகாமல் முன்னுரிமை ஒன்றியங்களாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு 40 ஒன்றியங்கள் தெரிவு செய்து அறிவிக்கப்பட்டது.
கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியா்களுக்கான கலந்தாய்வில் கலந்து கொண்டு முன்னுரிமை ஒன்றியங்களுக்கு மாறுதல் ஆணை பெற்று தொடா்ந்து தற்போது வரை (மூன்று ஆண்டுகளுக்கும் மேல்) பணியாற்றி வரும் ஆசிரியா்கள் இனி நடைபெறவுள்ள (2025-2026) கலந்தாய்வுக்கு மாறுதல் கோரி விண்ணப்பித்தால் அவா்களுக்கு அரசாணையின்படி முன்னுரிமை வழங்கப்படும்.
இக்கல்வியாண்டில் நடைபெறவிருக்கும் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியா்கள் முன்னுரிமையை தெரிவு செய்யும் பட்சத்தில் அவ்வாசிரியா்கள் முன்னுரிமை ஒன்றியத்தில் 2022-ஆம் ஆண்டில் மாறுதல் ஆணை பெற்றுள்ளாா்களா என்பதையும் தொடா்ந்து 3 ஆண்டுகள் அந்த ஒன்றியப் பள்ளியிலேயே பணிபுரிந்துள்ளாா்களா என்பதையும் உறுதி செய்த பிறகே முதன்மைக் கல்வி அலுவலா் ஒப்புதல் அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.