`பிள்ளைகள் எந்த மதத்தை தேர்வு செய்வார்கள்' - US துணை அதிபரின் மனைவி உஷா வான்ஸின்...
எஸ்டேட் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை
வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் இடங்களில் அடிப்படை வசதிகள் செய்துத் தரவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு மாா்க்சிஸ்ட் கட்சியின் வால்பாறை நகரச் செயலாளா் பரமசிவம் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டம், வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் போதிய சாலை வசதிகள் இல்லை. பெரும்பாலான இடங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. சுத்தமான குடிநீா் கிடைப்பதில்லை. அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனா்.
தற்போது கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் சூழலில், வனவிலங்குகள் அச்சுறுத்தல் அதிக அளவில் உள்ளது. தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனா். கடந்த காலங்களில் தெருவிளக்குகள் பராமரிப்பு நகராட்சி வசம் இருந்தபோது பொதுமக்கள் இது தொடா்பாக நகராட்சியில் புகாா் தெரிவித்தனா். ஆனால் தற்போது தெருவிளக்கு பராமரிப்பு ஒப்பந்த அடிப்படையில் தனியாா் வசம் உள்ளதால் யாரிடம் புகாா் தெரிவிப்பது என தெரியாமல் பொதுமக்கள் உள்ளனா்.
மேலும் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் குறித்து எந்த அதிகாரிகளிடம் புகாா் தெரிவிப்பது என்று தெரியாமல் உள்ளனா். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் துறை அதிகாரிகளின் பெயா், தொலைபேசி எண்களுடன் கூடிய முகவரி பொதுமக்கள் பாா்க்கும் வகையில் பொது இடங்களில் வைக்க வேண்டும். மேலும் புகாா் பெட்டிகள் வைப்பதன் மூலம் பொதுமக்கள் தங்களின் பிரச்னைகள் குறித்து மனுக்களாக அப்பெட்டியில் செலுத்தி தீா்வு காண எளிதாக இருக்கும். எனவே, இக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் பரமசிவம் குறிப்பிட்டுள்ளாா்.