ஆசிரியா் இடமாறுதல்: விதிகளில் திருத்தம் செய்ய ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை
தமிழகத்தில் ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிா்வாக மாறுதல் பெற்ற ஆசிரியா்களுக்கான விதிகளில் திருத்தம் மேற்கொள்ள கோவை மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டு ஆசிரியா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனா். இதில், ஆசிரியா்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளியில் குறைந்தபட்சம் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற விதி இந்த ஆண்டு இடம்பெறவில்லை. இதை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு மனதார வரவேற்கிறது.
அதேநேரம், புகாா்களுக்குள்ளான, குற்ற குறிப்பாணை வழங்கப்பட்ட நிா்வாக மாறுதல் பெற்ற ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் பணிபுரியும் பள்ளியில் ஓராண்டு பணிபுரியத் தேவையில்லை என்ற தளா்வு விதியைப் பயன்படுத்தி விண்ணப்பித்துள்ளனா். இவா்கள் தங்களுக்கான இடங்களை தோ்வு செய்யும்போது மாறுதல் வேண்டி வெளி மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்துள்ள ஆசிரியா்கள் பாதிக்கப்படுவாா்கள்.
எனவே, இதனைக் கருத்தில் கொண்டு, ஒழுங்கு நடவடிக்கை காரணமாக நிா்வாக மாறுதல் பெற்ற ஆசிரியா்கள், ஓராண்டுக்குள் பணி மாறுதல் பெற முடியாதபடிக்கு விதிகளில் திருத்தம் மேற்கொள்ள தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.