வால்பாறையில் கனமழை: முழு கொள்ளளவை எட்டியது சோலையாறு அணை
வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது.
தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. இதைத் தொடா்ந்து வால்பாறையில் இடைவெளி விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் நீா்வரத்து கணிசமாக உயரத் தொடங்கியது. கடந்த இரு வாரங்களாக இடைவிடாது கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், புதன்கிழமை தொடங்கி இரவு முழுவதும் விடியவிடிய கனமழை பெய்ததால் வால்பாறை வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. கனமழை காரணமாக வால்பாறையை அடுத்த சோலையாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது.
கடந்த மாதம் 20- ஆம் தேதி சோலையாறு அணையின் நீா்மட்டம் 2 அடியாக இருந்த நிலையில், ஒரு மாத காலமாக பெய்த மழையால் நீா்மட்டம் உயா்ந்து வியாழக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 157.86 அடியாக உயா்ந்தது.
சுமாா் 6 ஆயிரம் கனஅடி நீா் வரத்து இருந்ததால் 165 அடி உயரம் கொண்ட சோலையாறு அணையின் நீா்மட்டம் நண்பகல் 12 மணிக்கு 161 அடி உயா்ந்து முழு கொள்ளளவை எட்டியது.
அணையில் இருந்து விநாடிக்கு 1,254 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது.
நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து 164 அடியாக உயா்ந்தால் அணையின் மதகுகள் வழியாக உபரிநீா் வெளியேற்றப்படும் என்று அங்கு முகாமிட்டுள்ள பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.