‘முத்ரா’ கடன் வரம்பு ரூ.20 லட்சமாக உயா்வு: அறிவிக்கை வெளியிட்டது நிதியமைச்சகம்
நாட்டில் வேளாண் சாராத சிறுதொழில்களை ஊக்குவிக்கும் பிரதமரின் ‘முத்ரா’ திட்டத்தின்கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இது தொடா்பான அறிவிக்கையை மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது.
கடன் வரம்பு உயா்வின் மூலம் முத்ரா திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கம் மேலும் மேம்படும் என்று நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மத்தியில் மூன்றாவது முறையாக பிரதமா் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த ஜூன் மாதம் பதவியேற்றது. இதைத் தொடா்ந்து, 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, முத்ரா திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கடன் உச்ச வரம்பு தற்போதைய ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயா்த்தப்படும் என்ற அறிவிப்பை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்டாா்.
‘முத்ரா திட்டத்தில் ‘தருண்’ பிரிவின்கீழ் பெற்ற முந்தைய கடன்களை முறையாகச் செலுத்திய தொழில்முனைவோா், ரூ.20 லட்சம் வரை கடன் பெற முடியும். நாட்டில் தொழில்முனைவோருக்கு உகந்த சூழலை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது’ என்று அவா் தெரிவித்தாா்.
இந்நிலையில், ரூ.20 லட்சம் வரை கடன் பெற முத்ரா திட்டத்தில் ‘தருண் பிளஸ்’ என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. முந்தைய கடன்களை முறையாகச் செலுத்தியவா்கள் இப்பிரிவில் கடன் பெறலாம் என்று அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரூ.20 லட்சம் கடனுக்கான உத்தரவாத காப்பீடு, சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதியின்கீழ் (சிஜிஎஃப்எம்யு) வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநிறுவனம், விவசாயம் சாராத சிறு-குறு தொழில்முனைவோரின் வருவாய் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக, ரூ.10 லட்சம் வரை பிணையம் இன்றி எளிமையான முறையில் கடன் வழங்கும் முத்ரா திட்டம் பிரதமா் மோடியால் கடந்த 2015-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் சிஷு (ரூ.50,000 வரை), கிஷோா் (ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை), தருண் (ரூ.10 லட்சம்) ஆகிய பிரிவுகளில் கடன்கள் அளிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.