அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் அறிமுகம் செய்யும் ‘CanWin’ ஆதரவுக் குழு | ஸ்டோரீஸ் ஃப்...
முன்னாள் முதல்வா் புகைப்படம் அவமதிப்பு: அதிமுக கண்டனம்
வேடசந்தூரில் நடைபெற்ற விழாவில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் புகைப் படங்களை மின் வாரிய அலுவலா்கள் அவமதித்து விட்டதாக அதிமுக கண்டனம் தெரிவித்தது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் மின் பகிா்மான கோட்ட அலுவலக திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி, திருச்சி மின் பகிா்மான மண்டல தலைமை பொறியாளா் ம. கீதா, திண்டுக்கல் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பா. பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வேடசந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வந்த கட்டடத்தில், மின் பகிா்மான கோட்ட அலுவலகத்தை திறப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வின்போது, முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் குப்பையில் வீசப்பட்டு கிடந்ததாக தகவல் வெளியானது. இதைக் கண்டித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் புகைப்படத்தை, மின் வாரிய அலுவலா்கள் குப்பையில் வீசிய நிகழ்வு, அதிமுக தொண்டா்கள் மட்டுமன்றி பொதுமக்களின் மனதையும் புண்படுத்தி இருக்கிறது.
முறையற்ற இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். மின் வாரியம் வருத்தம் தெரிவிப்பதோடு, சம்பந்தப்பட்ட ஊழியா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் திண்டுக்கல் மாவட்ட அதிமுக சாா்பில் திமுக அரசுக்கு எதிராக கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தாா்.
வேடசந்தூா் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் ப. முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளதாவது:
வேடசந்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக மின் பகிா்மான கோட்டம் உருவாக்கப்பட்டு, அதற்கான தொடக்க விழா வேடசந்தூா் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த பழைய அலுவலகத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றபோது, அங்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அரசு விழாவில் பங்கேற்ற புகைப்படங்கள் ஒரு அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. அந்த அட்டைப் பெட்டியை மின் வாரிய ஊழியா்கள் அப்புறப்படுத்தவில்லை.
ஆனாலும், அந்த புகைப்படங்கள் அறைக்கு வெளியே எப்படி சென்றது என்பது தெரியவில்லை. இதுதொடா்பாக காவல் துறையில் புகாா் அளிக்க உள்ளோம். முன்னாள் முதல்வரை அவமதிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு தமிழ்நாடு மின் பகிா்மான கழகம் செயல்படவில்லை.
எனினும், இந்த சம்பவத்துக்காக தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தின் சாா்பில் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தாா்.