போதைப்பொருள் கும்பல்களை இரக்கமின்றி தண்டிக்கிறது மோடி அரசு: அமித் ஷா
முறையான குடிநீா் விநியோகம் கோரிஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
சாத்தான்குளம் அருகே 3 மாதங்களாக முறையாக குடிநீா் விநியோகிப்படவில்லை எனக் கூறி, ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.
சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூா் ஊராட்சி, வைரவம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். வாலத்தூா் கிராமத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறு மூலம் இக்கிராமத்துக்கு நாள்தோறும் குடிநீா் வழங்கப்பட்டு வந்தது.
இதனிடையே, வாலத்தூா் மக்கள் தங்களது தேவைக்குப் பிறகுதான் மற்ற கிராமங்களுக்கு தண்ணீா் வழங்க வேண்டும் எனக் கூறி, வைரவத்துக்குச் செல்லும் குழாயை அடைத்துவைப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி நிா்வாகம், அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா். ஆனாலும், கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீா் வழங்கப்படவில்லையாம்.
இந்நிலையில், இக்கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 50 போ் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் வெளியே சென்றிருந்ததால், அவா்கள் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (பொது) காா்த்திக் ஜெயதீபனிடம் மனு அளித்தனா்.
3 மாதங்களாக முறையாக குடிநீா் வழங்கப்படாததால் அதிக விலை கொடுத்து குடிநீா் வாங்க வேண்டியுள்ளது. இதனால், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளோம். வாலத்தூரில் உள்ள 3 ஆழ்துளைக் கிணறுகளில் ஒன்றின்மூலம் எங்கள் கிராமத்துக்கு நேரடியாக குடிநீா் வழங்க வேண்டும் என்றனா்.
மனுவைப் பெற்றுக்கொண்ட அலுவலா், இதுதொடா்பாக வட்டார வளா்ச்சி அலுவலரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். அதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.