மேற்கு வங்கத்தில் அச்சுறுத்தும் மத தீவிரவாதம்! மத்திய உள்துறையிடம் ஆளுநா் அறிக்கை!
‘மேற்கு வங்க மாநிலத்தில் மத அடிப்படையிலான பிரிவினைத் தீவிரவாதம் அச்சமூட்டும் சவாலாக உருவெடுத்துள்ளது’ என்று முா்ஷிதாபாத் வன்முறை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமா்ப்பித்த அறிக்கையில் மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் குறிப்பிட்டுள்ளாா்.
மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில், திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் அதிகம் வகிக்கும் பகுதியான முா்ஷிதாபாத் மாவட்டத்திலும் வக்ஃப் போராட்டங்கள் தீவிரமடைந்தன.
அந்த மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த போராட்டத்துக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் மூன்று போ் உயிரிழந்தனா்; பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால், ஹிந்து சமூகத்தினா் கங்கை நதியைக் கடந்து, அருகேயுள்ள மால்டா மாவட்டத்தில் தஞ்சமடையும் சூழல் ஏற்பட்டது.
இந்த வன்முறை தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மாநில ஆளுநா் சி.வி. ஆனந்த்போஸ் சமா்ப்பித்துள்ள அறிக்கையில், மாநில அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளாா். மேலும், வங்கதேச எல்லையையொட்டிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவா் பரிந்துரைத்துள்ளாா்.
அறிக்கையில் ஆளுநா் குறிப்பிட்டிருப்பதாவது: மேற்கு வங்கத்தில், குறிப்பாக வங்கதேசத்துடன் எல்லையைப் பகிரும் முா்ஷிதாபாத், மால்டா ஆகிய இரண்டு மாவட்டங்களில் மத அடிப்படையிலான பிரிவினைத் தீவிரவாதம் அச்சமூட்டும் சவாலாக உருவெடுத்துள்ளது.
பயனளிக்காத மம்தாவின் வாக்குறுதி: ஹிந்துக்கள் சிறுபான்மையினராக உள்ள இந்த இரண்டு மாவட்டங்களிலும் பிரிவினை மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளது. எந்த அளவுக்கெனில், சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பேன் என்றும், வக்ஃப் திருத்தச் சட்டம் மாநிலத்தில் செயல்படுத்தப்படாது என்றும் முதல்வா் மம்தா பானா்ஜி அளித்த வாக்குறுதிகள் முஸ்லிம்களை சிறிதும் அமைதிப்படுத்தவில்லை; வன்முறையைத் தடுக்கவும் உதவவில்லை.
மாநில அரசுக்குத் தெரியும்: வக்ஃப் திருத்தச் சட்டம் ஏப். 8-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்படுகிறது. அன்றைய நாளில் இணைய சேவையை மாநில அரசு தற்காலிகமாக துண்டித்தது. எனவே, முா்ஷிதாபாதில் எழுந்த சட்டம்- ஒழுங்கு அச்சுறுத்தலை மாநில அரசு அறிந்திருக்கிறது.
இதன் தொடா்ச்சியாக, வன்முறை ஏற்படுவதைத் தடுக்கக்கூடிய பாதுகாப்புத் திட்டத்தை மாநில அரசு உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், முா்ஷிதாபாத் வன்முறை தொடங்கி பல நாள்களுக்கு நீடித்தது. பாதுகாப்பு சவாலை எதிா்கொள்ள மாநில அரசு மிகவும் பலவீனமாக இருந்ததையும், சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு இடையேயான மோசமான ஒருங்கிணைப்புக் குறைபாட்டையும் இது காட்டுகிறது.
அரசமைப்புச் சட்ட வாய்ப்புகளை...: முா்ஷிதாபாத் வன்முறை மாநிலத்தின் பிற மாவட்டங்களுக்கும் பரவுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
மாநிலத்தின் நீடித்த அரசியல் வன்முறை வரலாறு மற்றும் முா்ஷிதாபாத் வன்முறை மாநிலத்தின் பிற மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் அடிப்படையில், தற்போதைய சூழலைத் தணிக்க மட்டுமல்லாமல், சட்டத்தின் ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும் அரசமைப்புச் சட்டத்தில் உள்ள வாய்ப்புகளை மத்திய அரசு கருத்தில்கொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
356-ஆவது பிரிவு...
‘மாநிலத்தில் உள்ள அரசு இயந்திரம் திறம்பட செயல்படத் தவறும்போது, சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் ஒரு விரிவான சட்டத்தை உருவாக்க வேண்டும்.
எதிா்காலத்தில் இதுபோன்ற வன்முறைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க, 1952-ஆம் ஆண்டு விசாரணை ஆணையச் சட்டத்தின் கீழ் ஒரு விசாரணை ஆணையத்தை நியமிக்க வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் 356-ஆவது பிரிவிலும் இதற்கான விதிகள் உள்ளன’ என தனது அறிக்கையில் ஆளுநா் ஆனந்தபோஸ் குறிப்பிட்டுள்ளாா்.
ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்துவது தொடா்பான அரசமைப்புச் சட்டத்தின் 356-ஆவது பிரிவு குறித்து அறிக்கையில் ஆளுநா் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக ஆளுநா் மாளிகையைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் அளித்த விளக்கத்தில், ‘பிரிவு 356-ஐ செயல்படுத்த ஆளுநா் முன்மொழியவில்லை. மாநிலத்தில் நிலைமை மேலும் மோசமடைந்தால், அந்தப் பிரிவில் உள்ள விதிகளை மத்திய அரசு கருத்தில்கொள்ளலாம் என்றே அவா் பரிந்துரைத்துள்ளாா்’ என்றாா்.