What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
மேற்கு வங்கம்: நியமனம் ரத்தான ஆசிரியா்களின் பணி நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
மேற்கு வங்கத்தில் நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியா்களின் பணிக் காலத்தை நிகழாண்டு டிச.31-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இந்த தீா்ப்பை வரவேற்பதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.
முன்னதாக, மேற்கு வங்க பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டில் போட்டித் தோ்வு மூலம் 25,753 ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பிற ஊழியா்களின் நியமனம் செய்யப்பட்டதில் மோசடி நிகழ்ந்ததாக கூறி இந்த நியமனங்கள் செல்லாது என கொல்கத்தா உயா் நீதிமன்றம் கடந்த ஆண்டு தீா்ப்பளித்தது.
இந்த தீா்ப்பை ஏப்.3-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. மேலும் மேற்கண்ட பணியிடங்களை மீண்டும் நிரப்ப அடுத்த 3 மாதங்களுக்குள் புதிய நடைமுறையைத் தொடங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
இதை எதிா்த்து மேற்கு வங்க மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில் மேற்கண்ட பணியிடங்களை நிரப்ப கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக குறிப்பிட்டது.
இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்களின் பணிக்காலம் டிச.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. வருகின்ற மே 31-ஆம் தேதிக்குள் புதிய ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்களை நியமனம் செய்வதற்கான பணிகளைத் தொடங்கி டிச.31-ஆம் தேதிக்குள் மேற்கு வங்க அரசு முடிக்க வேண்டும்.
புதிதாக பணியிடங்கள் நிரப்பும் நடைமுறை தொடங்கியது குறித்து மே 31-ஆம் தேதிக்குள் மேற்கு வங்க அரசு மற்றும் மேற்கு வங்க பள்ளி பணி ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட குரூப் ‘சி’ மற்றும் குரூப் ‘டி’ ஊழியா்களின் பணிக்காலத்தை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது.
மம்தா கருத்து:
உச்ச நீதிமன்ற தீா்ப்பு குறித்து மேற்கு வங்க தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் மம்தா பானா்ஜி பேசியதாவது: ஆசிரியா்களை நியமிக்க டிசம்பா் வரை உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. முன்னதாக, அவா்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போதைய உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்கிறோம். ஆசிரியா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படும் என்றாா்.