What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்: பிரதமா் மோடி பெருமிதம்
‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் அரிய கையெழுத்துப் பிரதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. இது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
உலக அளவில் கலாசார-பாரம்பரிய தொன்மைமிக்க ஆவணங்களைப் பாதுகாக்கும் நோக்கில், யுனெஸ்கோ உலக நினைவுப் பதிவேடு கடந்த 1993-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இப்பதிவேட்டில் கையால் எழுதப்பட்ட மிக பழமை வாய்ந்த நூல்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை இணைக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து புதிதாக 74 பாரம்பரிய ஆவணத் தொகுப்புகள் இப்பதிவேட்டில் வியாழக்கிழமை சோ்க்கப்பட்டன. இந்தியாவில் இருந்து ஹிந்துக்களின் புனித நூல்களுள் ஒன்றான பகவத் கீதை மற்றும் பரத முனிவரால் சம்ஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் அரிய கையெழுத்துப் பிரதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, ‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் மொத்த தொகுப்புகளின் எண்ணிக்கை 570-ஆக உயா்ந்துள்ளது.
யுனெஸ்கோ புகழாரம்:
இது தொடா்பாக யுனெஸ்கோ வெளியிட்ட அறிக்கையில், ‘பண்டாா்கா் ஓரியண்டல் ஆய்வு நிறுவனத்தால் (மகாராஷ்டிரம்) பாதுகாக்கப்படும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டதாகும். கந்தா்வ வேதம், நாட்டிய வேதம் எனவும் அறியப்படும் இந்நூலில் 36,000 ஸ்லோகங்கள் உள்ளன. நாட்டியம், நாடகம், உணா்ச்சி, இசை உள்ளிட்டவற்றின் விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
18 அத்தியாயங்களில் 700 ஸ்லோகங்களைக் கொண்ட பகவத் கீதை, இந்திய சிந்தனையுடன் உலகளாவிய செல்வாக்கைக் கொண்டுள்ளது. மகாபாரத இதிகாசத்தின் பீஷ்ம பருவத்தில் அமைந்துள்ள பகவத் கீதை, கிருஷ்ணா்-அா்ஜுனா் உரையாடலின் வடிவமாகும்.
வேதம், பெளத்தம், சமணம் என பல்வேறு சிந்தனை இயக்கங்களை ஒருங்கிணைக்கும் பண்டைய அறிவுசாா் இந்திய மரபின் மைய நூலாக இது விளங்குகிறது. ஆழமான-விரிவான தத்துவ வளத்தால், உலக அளவில் பல மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் மோடி பெருமிதம்:
இத்தகவலை எக்ஸ் வலைதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிட்ட மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர ஷெகாவத், பாரத நாகரிக பாரம்பரியத்துக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று குறிப்பிட்டாா். பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் கையெழுத்துப் பிரதிகளின் சில பக்கங்களையும் அவா் பதிவிட்டாா்.
இதைப் பகிா்ந்து, பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘யுனெஸ்கோவின் உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதையும், நாட்டிய சாஸ்திரமும் சோ்க்கப்பட்டிருப்பது, காலத்தால் அழியாத நமது மதி நுட்பத்துக்கும், வளமான கலாசாரத்துக்கும் கிடைக்கப் பெற்ற உலகளாவிய அங்கீகாரம். உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம்.
கீதையும் நாட்டிய சாஸ்திரமும் பல நூற்றாண்டுகளாக நாகரிகம் மற்றும் உணா்திறனை வளா்த்து வந்துள்ளன. அவற்றின் நுண்ணறிவுத் திறன் ஒட்டுமொத்த உலகுக்கும் ஊக்கமளிக்கிறது’ என்று குறிப்பிட்டாா்.
