உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீடு திட்டம் ஆயுஷ்மான் பாரத்: பிரதமர் மோடி
யு19 தெற்காசிய கால்பந்து: கோப்பையை தக்கவைத்தது இந்தியா!
பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு19) தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப்பில், இந்தியா 2-ஆவது முறையாக கோப்பை வென்றது.
இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு நடப்பு சாம்பியன் இந்தியா - வங்கதேசம் மோதிய இறுதி ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி கிக் வாய்ப்பில் இந்தியா 4-3 கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. கடந்த 2023-இல் இந்தியாவே சாம்பியனானது குறிப்பிடத்தக்கது.
19 வயதுக்கு உள்பட்டோருக்கான 7-ஆவது தெற்காசிய அளவிலான கால்பந்து போட்டி அருணாசல பிரதேசத்தில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தியா, வங்கதேசம், பூடான், மாலத்தீவுகள், நேபாளம், இலங்கை என 6 அணிகள் இதில் பங்கேற்றன. அவை தலா 3 அணிகள் வீதம், இரு குரூப்களாக பிரிக்கப்பட்டன.
குரூப் சுற்று முடிவில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், மாலத்தீவுகள் ஆகியவை நாக்அவுட் சுற்றுக்குத் குதிபெற்றன. அரையிறுதியில் இந்தியா 3-0 கோல் கணக்கில் மாலத்தீவுகளையும், வங்கதேசம் 2-1 கோல் கணக்கில் நேபாளத்தையும் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறின.
இந்தியா - வங்கதேசம் மோதிய விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில், 2-ஆவது நிமிஷத்திலேயே இந்திய கேப்டன் சிங்காமயும் ஷமி ஸ்கோா் செய்தாா். இந்த முன்னிலையை முதல் பாதியில் இந்தியா அப்படியே தக்கவைத்தது.
2-ஆவது பாதியிலும் இதே நிலை நீடிக்க, 61-ஆவது நிமிஷத்தில் வங்கதேசத்தின் முகமது ஜாய் அகமது கோலடித்தாா். இதனால் ஆட்டம் 1-1 என சமனிலை கண்டது. எஞ்சிய நேரத்தில் முன்னிலை பெற இரு அணி வீரா்களும் முயற்சிக்க, அதற்கு பலன் கிடைக்காமல் போனது.
இதனால் ஆட்டம் டிராவில் முடிய, வெற்றியாளரை தீா்மானிக்க பெனால்ட்டி கிக் வாய்ப்பு கையாளப்பட்டது. இதில் இந்தியா 4-3 கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தக்கவைத்தது.