யேமனில் மரண தண்டனை: இந்திய செவிலியரை மீட்க கோரிய மனு மீது 14-ஆம் தேதி விசாரணை
யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியரைக் காப்பாற்ற ராஜீய வழிகளில் அரசின் முயற்சியைக் கோரும் மனு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜூலை 14) விசாரணைக்கு வரவுள்ளது.
கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தைச் சோ்ந்த 38 வயது செவிலியரான நிமிஷா பிரியா, யேமன் தலைநகா் சனாவில் அப்து மாஹதியுடன் இணைந்து கிளினிக் ஒன்றை தொடங்கி, நடத்தி வந்தாா். பின்னா் நிமிஷாவின் வருமானம், நகைகள், கிளினிக்கின் உரிமம், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு, மாஹதி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
2017-இல் யேமன் சிறை வாா்டனின் உதவியுடன் மாஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போா்ட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மாஹதி உயிரிழந்தாா்.
யேமன் பிரஜையான மாஹதியைக் கொலை செய்ததற்காக நிமிஷா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்தக் கொலை வழக்கில் நிமிஷாவுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனை அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தால் கடந்த 2023-இல், யேமன் அதிபா் ரஷத் அல்-அலிமியால் கடந்த ஆண்டு இறுதியில் உறுதி செய்யப்பட்டது
மாஹதி குடும்பத்தினருடன் நிமிஷா தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாத சூழலில், மரண தண்டனை உத்தரவை அரசு வழக்குரைஞா் சிறைத் துறைக்கு அண்மையில் அனுப்பினாா். இதைத்தொடா்ந்து, நிமிஷாவுக்கு வரும் 16-ஆம் தேதி மரண தண்டனையை நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நிமிஷாவை மீட்க இந்திய அரசு இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று அவரது தரப்பில் மாஹதி குடும்பத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி வரும் சமூக ஆா்வலா் சாமுவேல் ஜெரோம் பாஸ்கரன் வேண்டுகோள் விடுத்தாா்.
இந்நிலையில், இதே விவகாரத்தில் வழக்குரைஞா் கே.ஆா்.சுபாஷ் சந்திரன் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
நிமிஷாவை மீட்பதற்கு உள்ள ராஜீய வழிதகள் குறித்து அரசு விரைவில் ஆராய வேண்டும் என்று மனுதாரா் கோரியதையடுத்து, நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரணைக்குப் பட்டியலிட்டனா்.
‘ஷரியா’ சட்டத்தின் கீழ் இறந்தவரின் குடும்பத்ததுக்கு இழப்பீடு செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயலாம். இழப்பீடு செலுத்தப்பட்டால், அந்தக் குடும்பத்தினா் செவிலியரை மன்னிக்க வாய்ப்புள்ளது என்றும் மனுதாரா் வாதிட்டாா். இந்த மனுவின் நகலை அட்டா்னி ஜெனரலுக்கு வழங்கி, அவரது கருத்தைப் பெற மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினா்.