இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும்: ரஷியா அறிவிப்பு
ராசிபுரம் அருகே ரூ. 2.20 கோடியில் பட்டுக்கூடு விற்பனை அங்காடி வளாகம்
ராசிபுரம்: ராசிபுரம் அருகே ஆணைக்கட்டிப்பாளையம் பகுதியில் பட்டுக்கூடு விற்பனை அங்காடி வளாகம் அமைக்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் புதன்கிழமை தெரிவித்தாா்.
ராசிபுரம், ஆணைக்கட்டிப்பாளையம் பகுதியில் ரூ. 2.20 கோடி மதிப்பில் பட்டுக்கூடு விற்பனை அங்காடி வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுவிழா ஆக. 21-இல் நடைபெறுகிறது. இதில் தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பங்கேற்று அடிக்கல் நாட்டிவைத்து பயனாளிகளுக்கு நலத் திட்டங்களை வழங்குகிறாா்.
இதைத் தொடா்ந்து, அங்காடி அமையவுள்ள இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வுசெய்த கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாமக்கல் உதவி இயக்குநா் அலுவலக கட்டுப்பாட்டில் நாமக்கல், கரூா் மாவட்டங்களில் 3,172 ஏக்கா் பரப்பளவில் 1,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மூலம் மல்பெரி நடவுசெய்து, பட்டுவளா்ப்பு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு சராசரியாக மாதந்தோறும் ஒரு லட்சம் முட்டைத்தொகுதிகள் வரை வளா்க்கப்பட்டு சராசரியாக 80,000 கிலோ பட்டுக்கூடுகள் வரை உற்பத்தி செய்யப்படுகின்றன.
இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகள் தருமபுரி, சேலம் மற்றும் கா்நாடக மாநிலத்தில் உள்ள அரசு பட்டுக்கூடு அங்காடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன.
தமிழக முதல்வா் பட்டு விவசாயிகளின் நலன்கருதி, இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகளை உள்மாவட்டத்திலேயே சந்தைப்படுத்த ஏதுவாக கடந்த 2021-ஆம் ஆண்டு ராசிபுரம் பகுதியில் அரசு பட்டுக்கூடு அங்காடி நிறுவ உத்தரவிட்டாா். இந்த பட்டுக்கூடு அங்காடி தொடங்கப்பட்டதில் இருந்து, மாதந்தோறும் சராசரியாக 10 ஆயிரம் கிலோ என்ற அளவில் தற்போதுவரை சுமாா் 400 டன் அளவுக்கு பட்டுக்கூடுகள் ரூ. 16.49 கோடி மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
தற்போது பயன்பாட்டில் உள்ள ராசிபுரம் அரசு பட்டுக்கூடு அங்காடி போதுமான இடவசதி இல்லாததால், அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த பட்டுக்கூடு அங்காடி வளாகமாக மேம்படுத்த திட்டமிடப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு கோரப்பட்டது.
அதன் அடிப்படையில், ரூ. 2.20 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டு, ராசிபுரம் ஆணைக்கட்டிப்பாளையம் பகுதியில் புதிய ஒருங்கிணைந்த பட்டுக்கூடு அங்காடி வளாகம் கட்டுவதற்கு ஆக. 21-இல் அடிக்கல் நடப்படுகிறது. இதில் தமிழக அமைச்சா்கள் பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறாா்.
இ-ஒப்பந்த விற்பனை:
விழாவில், 147 விவசாயிகளுக்கு ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் பட்டுவளா்ப்பு கருவி உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. மேலும், புதிய ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்தில் இ-டிரேடிங் முறையில் பட்டுக்கூடு ஏலம் நடத்திடும் முறை அமல்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம், வா்த்தகமானது 4 மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மேலும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பட்டுக்கூடு உற்பத்திக்கு நல்ல விலை கிடைப்பதோடு, அவா்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக அமையும்.
ராசிபுரம், புதிய ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்துக்கு தேவையான பொருள்கள் கொள்முதல் செய்திட ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு மாநில அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. மேலும், ராசிபுரம், புதிய ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்தில் புதிய பட்டுநூற்பு அலகு மற்றும் பட்டு முறுக்கு அலகு ஆகியவை நிறுவிடும் திட்டங்களும் பட்டுவளா்ச்சித் துறையால் மேற்கொள்ளப்படவுள்ளன என்றாா்.
அப்போது, ராசிபுரம் அட்மா குழுத் தலைவா் கே.பி.ஜெகநாதன், பட்டுவளா்ச்சித் துறை உதவி இயக்குநா் (பொ) க.நிஷாந்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.