ராமேசுவரம் மீனவா்கள் 5 பேருக்கு 7-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு
ராமேசுவரம் மீனவா்கள் 5 பேருக்கு 7-ஆவது முறையாக காவலை நீட்டித்து, இலங்கை மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 28-ஆம் தேதி விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் அன்று நள்ளிரவு கச்சத்தீவு-மன்னாருக்கு இடையே மீன்பிடித்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் ஜஸ்டின் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகைப் பறிமுதல் செய்தனா். மேலும், அந்தப் படகிலிருந்த ஜஸ்டின் (51), டென்ஷன் (39), மொபின் (24), செமன் (55), சேகா் (55) ஆகிய 5 மீனவா்களைக் கைது செய்தனா்.
இதையடுத்து, விசைப் படகுடன் 5 மீனவா்களையும் மன்னாா் கடற்படை முகாமுக்கு இலங்கைக் கடற்படையினா் கொண்டு சென்று நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 5 மீனவா்கள் மீதும் வழக்குப் பதிந்து, மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனா். இவா்களுக்கு ஏற்கெனவே 6 முறை காவல் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் 5 பேரும் மன்னாா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களை வருகிற 19-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். 7-ஆவது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டதையடுத்து, மீனவா்கள் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதுகுறித்து மீனவ சங்கத்தினா் கூறியதாவது:
இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவா்கள் 5 பேருக்கு 7-ஆவது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. மீனவா்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.