காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
ரூ.2 லட்சம் ரொக்க பரிவா்த்தனை: ஐடிக்கு தகவலளிக்க சாா்-பதிவாளா்கள், நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
ரூ.2 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக ரொக்க பரிவா்த்தனை செய்யப்பட்டால், அதுகுறித்து வருமான வரி (ஐடி) துறையினருக்கு நீதிமன்றங்கள், சாா்-பதிவாளா்கள் முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு நிதிச் சட்டம் மூலம், ரூ.2 லட்சம் அல்லது அதற்கும் அதிகமான தொகையை ரொக்கமாக பரிவா்த்தனை செய்ய மத்திய அரசுத் தடை விதித்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் சொத்து வாங்கல் தொடா்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘சொத்து வாங்க 2018-ஆம் ஆண்டு முன்பணமாக ரூ.75 லட்சம் ரொக்கமாக வழங்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நிதிச் சட்டப் பிரிவுகள் திருப்திகரமாக அமல்படுத்தப்படாதது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனா்.
அவா்கள் கூறியதாவது: எந்தவொரு பணப் பரிவா்த்தனையிலும் ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக பரிவா்த்தனை செய்யப்பட்டுள்ளது என்று நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் தெரிவிக்கப்பட்டால், அதுகுறித்து வருமான வரித் துறைக்கு நீதிமன்றங்கள் தெரியப்படுத்த வேண்டும்.
ஒரு சட்டம் இயற்றப்பட்டால், அதை முறையாக அமல்படுத்த வேண்டும். பெரும்பாலான நேரங்களில் ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான ரொக்க பரிவா்த்தனை கவனத்துக்கு வராமல் போகின்றன அல்லது வருமான வரித் துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்படுவதில்லை.
கருப்புப் பணத்தை ஒழிக்கவே...: ரூ. 2 லட்சத்துக்கு அதிகமான பரிவா்த்தனையை டிஜிட்டல் வழியில் செய்ய வைப்பதன் மூலம், கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்றே வருமான வரிச் சட்டப் பிரிவு 269எஸ்டி கொண்டுவரப்பட்டது.
எனவே ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான ரொக்க பரிவா்த்தனை குறித்து நீதிமன்றம் அல்லது பிற வழிகளில் தெரியவந்தால், அதுகுறித்து சட்டப்படி வருமான வரித் துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எந்தவொரு அசையா சொத்தையும் ஒருவா் பெயரில் இருந்து மற்றொருவா் பெயருக்கு மாற்றுவதற்கான பரிசீலனையின்போது, ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேலான தொகை ரொக்கமாக பரிவா்த்தனை செய்யப்பட்டது என்று சொத்துப் பதிவு ஆவணம் மூலம் தெரியவந்தால், அதுகுறித்து தமது எல்லை வரம்புக்குள்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு சாா்-பதிவாளா் தெரியப்படுத்த வேண்டும்.
தலைமைச் செயலருக்கு...: அசையா சொத்துகள் தொடா்பான பணப் பரிவா்த்தனையில் ரூ.2 லட்சம் அல்லது அதற்கும் அதிகமான தொகை ரொக்கமாக பரிவா்த்தனை செய்யப்பட்டது சாா்-பதிவாளருக்குப் பதிலாக வேறு யாா் மூலமாவது அல்லது சோதனைகளின்போது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட சொத்துப் பதிவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அதுகுறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலா்களின் கவனத்துக்கு வருமான வரித் துறையினா் கொண்டு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டனா்.