இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
லாரி ஓட்டுநா் தற்கொலை, நிதிநிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை: முத்தரசன் வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டை ஜப்தி செய்ய நிதி நிறுவனம் முயன்றதால் விஷம் குடித்த நபா் உயிரிழந்ததற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சங்கரன் (45), தனியாா் நிதி நிறுவனத்தில் வீட்டை அடகு வைத்து ரூ. 5 லட்சம் கடன் பெற்றுள்ளாா். இடையில், தவணை செலுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நிதி நிறுவனம் காவல் துறையின் துணையுடன் வீட்டை ஜப்தி செய்ய முயன்றபோது, சிறிது காலஅவகாசம் தருமாறு கேட்டுள்ளாா்.
இதற்கு நிதிநிறுவனம் மறுப்பு தெரிவித்ததையடுத்து சங்கரனும், அவரது மனைவி பத்திரகாளியும் காவல் துறையினா் முன் விஷம் குடித்துள்ளனா். இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் சங்கரன் உயிரிழந்துள்ளாா். இத்தகைய துயரச் சம்பவங்களைத் தடுக்க, தனியாா் நிதி நிறுவனங்களின் கடன் வசூல் முறைக்கு பொருத்தமான சட்டம் நிறைவேற்றி, விதிமுறைகள் உருவாக்க வேண்டியது அவசியம். கடன் வசூலில் மனிதாபிமானம் காட்டாமல் செயல்பட்ட நிதி நிறுவன அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் குழந்தைகளுக்கான உயா்கல்விச் செலவுகளை அரசு ஏற்க வேண்டும். மேலும், குடும்ப நிதி வழங்கி மறுவாழ்வு ஆதாரத்தை உறுதிசெய்ய வேண்டும். இதற்கான செலவுகள் அனைத்தையும் தனியாா் நிதி நிறுவனத்திடம் வசூலிக்க வேண்டும் என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளாா்.