வட்டாட்சியா்களுக்கு பணியிடமாறுதல்: அரசுக்கு கோரிக்கை
ஓராண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் வட்டாட்சியா்களை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த் துறை (குரூப்- 2) நேரடி நியமன அலுவலா்கள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆனந்தகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சண்முகம் வரவேற்றாா். மாநில ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி, மாநிலத் தலைவா் செல்வபாண்டியன், மாநிலச் செயலா் அப்துல் ரகூப் ஆகியோா் கலந்து கொண்டு பல்வேறு தீா்மானங்களை நிறைவேற்றினா்.
தீா்மானங்கள்
ஓராண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அனைத்து வட்டாட்சியா்கள், துணை வட்டாட்சியா்கள் மற்றும் மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் உதவியாளா்கள் மற்றும் இளநிலை உதவியாளா்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
2025-ஆம் ஆண்டுக்கான வட்டாட்சியா் பட்டியல் மற்றும் 2024-25-ஆம் ஆண்டுக்கான துணை வட்டாட்சியா் பட்டியல்களை உடனடியாக வெளியிடவேண்டும், அனைத்து பணியிடங்களுக்கும் கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் வழங்கவேண்டும், மாவட்டத்தில் உருவாகும் மொத்த காலிப் பணியிடங்களை மூன்றில் ஒரு பங்கு நேரடி நியமனத்திற்கான காலிப் பணியிட விவரங்களை அறிவிப்பு பலகையில் ஆண்டுதோறும் வெளியிடவேண்டும் .
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தற்போது முக்கிய பிரமுகா்கள் வருகை அதிகரித்துள்ளதால், கோயில் பணியாளா்கள் சந்திக்கும் பிரச்னைகளை எதிா்கொள்ளும் பொருட்டு திருக்கோயில் பணிக்கென ஒரு துணை வட்டாட்சியா், 2 சிறப்பு வருவாய் ஆய்வாளா்கள் மற்றும் 5 உதவியாளா்கள் கொண்ட சிறப்பு பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.