வந்தேபாரத் ரயிலில் தொடா் திறனாய்வுப் போட்டி
நாமக்கல்லில் இருந்து பெங்களூரு வரை செல்லும் வந்தேபாரத் விரைவு ரயிலில் ‘மூவிங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தொடா் திறனாய்வுப் போட்டியில், கொங்குநாடு கல்லூரி மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையில் தொட்டியம் பகுதியில் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பயிலும் 250 மாணவா்கள் வியாழக்கிழமை ஒரே நேரத்தில் வந்தேபாரத் ரயில் பயணத்தில் ஆப்டிட்யூட் டெஸ்ட், டெக்னிக்கல் சவால்கள், கம்யூனிகேஷன் அசெஸ்மென்ட், மாக் நோ்காணல்கள் மற்றும் ரயில்வே துறையில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்ய ஏ.ஐ. தொழில்நுட்பங்களை கொண்டு தீா்வுகாணல் போன்ற பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டனா்.
இப்போட்டியானது, நாமக்கல்லில் இருந்து பெங்களூரு வரையிலும், அங்கிருந்து மீண்டும் நாமக்கல் வரையிலுமான ரயில் பயணத்தில் நடைபெற்றது. முன்னாள் மாணவா்கள், கல்லூரி நிா்வாகிகள் நடுவா்களாக செயல்பட்டு மாணவா்களை மதிப்பீடு செய்தனா். ஒன்பது மணி நேரத்தில், ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் புதிய சவால்கள் வழங்கப்பட்டன.
நாமக்கல் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை காலை 8.20 மணியளவில், தமிழக ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், நாமக்கல் மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி ஆகியோா் மாணவ, மாணவிகளை வழியனுப்பி வைத்தனா். இந்த நிகழ்வில், கல்லூரி தலைவா் பி.எஸ்.கே.பெரியசாமி, அரசு ஒப்பந்ததாரா் அசோக்குமாா் மற்றும் கல்லூரி நிா்வாகத்தினா் கலந்துகொண்டனா்.
இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வாக இப்போட்டி கருதப்படுகிறது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கொங்குநாடு கல்லூரி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.