ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்...
வயல்களில் காட்டுப்பன்றிகளையும், எலிகளையும் கட்டுப்படுத்த அருமையான யோசனை!
காட்டுப்பன்றிகளால விவசாயமே செய்ய முடியாத நிலையிலதான் பல விவசாயிகள் இருக்குறாங்க. விவசாய நிலங்களுக்கு வரும் காட்டுப்பன்றிகளைச் சுட்டுக் கொல்றதுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், விவசாயிகள் அதை மனசளவுல விரும்பல என்றே சொல்லப்படுது.காட்டுப்பன்றிகளோட வருகையைத் தடுக்கறதுக்கு, சில விவசாயிகள் தாங்களே சில உபாயங்களைக் கடை பிடிக்கறாங்க. அதாவது, நாட்டுப் பன்றிகள் இருப்பது தெரிஞ்சா அந்தப் பக்கம் காட்டுப்பன்றிகள் வராது. அதனால, நாட்டுப் பன்றிகளோட சாணத்தைத் தண்ணில கரைச்சு வயல்களைச் சுத்தி தெளிச்சுவிட்டா, அந்த வாசனைக்கு வராது. அதேசமயம் வயல்ல என்ன பயிர் இருக்கு என்பதை தெரிஞ்சுதான் காட்டுப்பன்றிகள் வருது. பயிர்களோட வாசனையை அறியாத வண்ணம், தென்னைநார்க் கயிறுகளை மண்ணெண்ணெய்ல 2 மணி நேரம் ஊறவச்சு, அதை, ஓர் அடி இடைவெளியில வரிசையா வயல்ல கட்டிவிட்டா, பயிர்களோட வாசனையை நுகர முடியாத அளவுக்கு மண்ணெண்ணெய் வாசனை இருக்கும்.

வேலிப்பயிர்களா ஆனைக்கற்றாழை, சூடான் முள், இலந்தை, களாக்காய், முள்கொன்றை, குசம்புபூ, ஆமணக்கை நெருக்கமா நடவு செய்றது மூலமாகவும், காட்டுப்பன்றிகளோட வருகையைத் தடுக்கலாம். பழைய சேலைகளைக் கட்டிவிட்டா, மனித நடமாட்டம் இருக்குனு நினைச்சு வயல் பக்கம் வராது. சாயந்திரம் நேரத்துலதான் பெரும்பாலும் காட்டுப்பன்றிகள் வயல்களுக்கு வருது. அதனால ஆட்டோமேட்டிக்காக ஒலியெழுப்பும் சாதனங்களைப் பயன்படுத்தியும் காட்டுப்பன்றிகளை விரட்டலாம். மக்காச்சோளம், நிலக்கடலை, கரும்பு, காய்கறிகளைத்தான் காட்டுப்பன்றிகள் அதிகம் விரும்புது. இதுக்கு மாற்றா பிற பயிர்களையும் தேர்வு செய்யலாம்.
1 கிலோ விதை 100 ரூபாய்...
தமிழ்நாட்டிலும் சாகுபடி செய்யலாம்!
பாப்கார்ன் மாதிரியே இருக்கும் மக்கானாவை பீகார் மாநிலத்துல அதிக அளவு உற்பத்தி செய்றாங்க. இந்தியாவுல 90 சதவிகித மக்கானா, பீகார்லதான் உற்பத்தி செய்யப்படுது. அப்படியென்ன மக்கானாவுல இருக்குனு தோணலாம். 100 கிராம் பொரியில 9.5 சதவிகித புரதச்சத்து இருக்கு. இதை, ‘சூப்பர் ஃபுட்’னு வகைப்படுத்தியிருக்காங்க. நம்ம ஊர்ல நெல் சாகுபடி செய்வது போலத்தான் பீகார்ல மக்கானா விதைகளை நாத்து விட்டு வளர்த்து, பிறகு, நடவு வயலைத் தயார் செய்து நடுறாங்க. மக்கானா வளரும் வயல்ல 1 அடி உயரத்துக்கு தண்ணீரைத் தேக்கி வைக்கணும். நடவு செஞ்ச 40 நாள்கள்ல பூக்கள் உருவாகிடும். அடுத்த 40 நாள்கள்ல பழங்கள் உருவாகி அதுல இருந்து விதைகள் வெடித்து வெளிவரும். அதைச் சேகரிச்சு விற்பனை செய்றாங்க. இப்படி, வருஷத்துக்கு நாலு முறை அறுவடை செய்யலாம்.

இதோட இலைகள் தாமரை இலைகளைப் போன்றே பரந்து காணப்படும். தாமரைக் குடும்பத்தைச் சேர்ந்த மக்கானா விதைகளுக்கு, உலகம் முழுவதும் நல்ல கிராக்கி உண்டு. மக்கானா விதைகளின் விலை, தரத்தைப் பொறுத்து 1 கிலோ 100 - 200 ரூபாய் வரை விக்குது. இதையே பொரியாக்கி வித்தா கிலோவுக்கு 800 - 1,000 ரூபாய் வரை கிடைக்கும். இது, தமிழ்நாட்டுல விளையுமா என்றால், அதிக தண்ணீர் வசதியுள்ள நிலங்கள்ல விளையும்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க. குட்டை, குளங்கள்லகூட இதை வளர்க்கலாம்னு சொல்றாங்க.

தென்னங்கன்னை நடவு செய்யும்போது இதைக் கவனிங்க!
தேங்காய் விலை ஏறினாலும் ஏறிச்சு, தென்னை நடவு மறுபடியும் சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. 50 ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருந்த தென்னங்கன்னு இப்போ தரத்தைப் பொறுத்து 100-லிருந்து 150 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுது. தென்னங்கன்னை வாங்குறவங்க நேரடியா போய் நர்சரியில வாங்காதீங்க. நல்ல விளைச்சல் கொடுக்குற மரத்திலிருந்து பழுத்து தானாகவே விழும் தேங்காய் நெற்றுகளை பதியம் போட்டு, அதுல இருந்து முளைச்சு வரும் தென்னங்கன்னுகளை விற்பனை செய்றவங்ககிட்ட வாங்குறதுதான் நல்லது. நர்சரியாக இருந்தாலும், இந்த முறையில கன்னுகளை உற்பத்தி செய்றவங்ககிட்ட வாங்கணும். அதேபோல அவங்ககிட்ட கன்னுகளை வாங்கிட்டுபோய் நடவு செஞ்சவங்களோட அனுபவத்தையும் கேட்டு தெரிஞ்சுகிறதுக்கு ரொம்ப அவசியம்.

தென்னை மரங்கள் 50 ஆண்டுக்கால பயிர். அதனால அவசரப்பட்டு நடவு செய்யாதீங்க. குழி எடுத்துட்டோம், மழைக்கு முன்ன நட்டே ஆகணும்னு ஒத்தக்கால்ல நிக்க வேண்டாம். இப்போ 100 ரூபாய்க்கு விற்கும் தென்னங்கன்னு மார்கழி, தை மாசத்துல 50 ரூபாய்க்கே கிடைக்கும். தண்ணி வசதி இருக்குறவங்க அப்போதுகூட நடலாம். ஆழியார், வேப்பங்குளம், அரசம்பட்டி, அய்யம்பாளையம், சௌகாட்னு தென்னையில பல ரகங்கள் இருக்கு. உங்கள் பகுதியில எந்த ரகம் நல்லா விளையுதோ, அதை நடவு செய்யுங்க.

எலிகளைக் கட்டுப்படுத்த அருமையான யோசனை!
எதையாவது கொறிச்சுகிட்டே, மென்னுகிட்டே இருக்குறவங்கள, ‘பாத்து பல்லு தேய்ஞ்சிடப்போது’னு கிண்டல் பண்ணுவோம். இப்படி எதையாவது கொறிச்சுகிட்டு இருக்குற விலங்கென்றால் அது எலிதான். எலிகளுக்கு முன்பற்கள் வளர்ந்துகிட்டே இருக்கும். இந்தப் பற்கள அப்படியே வளரவிட்டா எலிகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால இயற்கையாகவே அது எதையாவது கொறிக்குறது, கடிக்குறது, தோண்டுறதுனு பல்லுக்கு வேலை கொடுத்து, அதை வளர்வதைத் தடுத்து வெச்சுக்கும். இப்படி, கடிச்சுக்கிட்டே இருக்குறதால, பற்கள் எப்பவும் கூர்மையா இருக்கும். இந்தக் கூர்மையான பற்கள்தான் எலிகளின் பலமே.

வயல்கள்ல விதைகளைப் போட்டா அதைச் சாப்பிடும். நாத்துகள கடிச்சு வைக்கும். இளங்கதிர்களைச் சாப்பிடும். இப்படி, சாப்பிடுற எலிகள புல்லெலினு சொல்றாங்க. கேழ்வரகு, நிலக்கடலையில அதிகம் காணப்படும் இன்னொரு எலியை வெள்ளெலினு சொல்றாங்க. வயல்கள்ல வரப்புகளுக்கு கீழே குழியெடுத்து உள்ளே தங்கி, ஆழமான வளைகளை ஏற்படுத்துற எலியை வரப்பெலினு சொல்றாங்க. இந்த மூணு வகையான எலிகள்தான் வயல்கள்ல அதிக சேதத்தை ஏற்படுத்தக்கூடியது. இவை தவிர, இன்னும் நிறைய எலி வகைகள் இருக்கு. டெல்டா மாவட்டங்கள்ல கிட்டங்கிகளைப் பயன்படுத்தி எலிகளைக் கட்டுப்படுத்துவாங்க. எலிகளைப் பிடிச்சு சாப்பிட ஆந்தைகளை வயல்களுக்கு வரவைக்க பறவைத் தாங்கிகள் அமைப்பாங்க. அறுவடை முடிஞ்சதும் வரப்புகள வெட்டி புகைமூட்டம் போட்டு எலிகளை விரட்டுறதும் உண்டு. சிறிய வரப்புகளை அமைச்சும் வரப்பெலிகளைக் கட்டுப்படுத்தலாம்னு யோசனைகளைச் சொல்றாங்க விவசாயிகள்.