நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவித தளா்வும் இருக்காது: மத்திய...
வாக்காளர் குளறுபடி, தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க மறுப்பு! எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
வாக்காளர் அடையாள அட்டை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் செய்த குளறுபடி, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு வாக்காளர் பட்டியலில் குளறுபடி, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் விதி எண் 267இன் கீழ் ஒத்திவைப்பு நோட்டீஸை திங்கள்கிழமை காலை வழங்கினர்.
இதையும் படிக்க : அப்பாவு எதிர்ப்பு தீர்மானம் தோல்வி!
ஆனால், எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்க மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மறுப்பு தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவைக் குறிப்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துகள் இடம்பெறாது என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அவை நடவடிக்கைகளை புறக்கணித்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த சுகேந்து சேகர் ராய், மௌசம் பி நூ, சுஷ்மிதா தேவ் மற்றும் காங்கிரஸின் பிரமோத் திவாரி ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் குளறுபடி தொடர்பாகவும், திமுகவின் வில்சன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் சிவதாசன் ஆகியோர் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாகவும் விவாதிக்க நோட்டீஸ் வழங்கினர்.
மேற்கு வங்கத்தின் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு எதிராக நடைபெறும் அட்டூழியங்கள் குறித்து விவாதிக்க பாஜக எம்பி சமிக் பட்டாச்சார்யா நோட்டீஸ் வழங்கியிருந்தார்.
மேலும், எலான் மஸ்க் நிறுவனத்துடன் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து விவாதிக்க இந்திய கம்யூனிஸ்ட் எம்பி பி. சந்தோஷ் குமார் நோட்டீஸ் அளித்திருந்தார்.