``விண்வெளியில் இருப்பது வித்தியாசமாக உள்ளது..'' - பிரதமர் மோடியிடம் பேசிய சுபான்ஷு சுக்லா!
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, விண்வெளி துறையில் தனியாரின் பங்களிப்பை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் ஆக்ஸியம் ஸ்பேஸ் எனும் தனியார் நிறுவனம் ஆக்ஸியம்-4 திட்டத்தின் மூலம் மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்க நாசா உதவுகிறது. இத்திட்டத்தில் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும் இணைந்துள்ளது.

டிராகன் விண்கலம் பூமியை சுற்றி 28 மணி நேர பயணத்திற்குப் பிறகு 26-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது. இதன் மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் பதித்த முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை சுபான்சு சுக்லா படைத்தார். இந்திய விமானப்படையின் குரூப் கேப்டனான சுபான்சு சுக்லா, ஆக்ஸியம்-4 விண்வெளி திட்டத்தில் இடம் பெற்ற 4 விண்வெளி வீரர்களில் ஒருவர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி சனிக்கிழமை (ஜூன் 28) சுபன்ஷு சுக்லாவுடன் பேசினார். இந்த உரையாடலில், சுபான்ஷு சுக்லாவை பாராட்டிய பிரதமர் மோடி,``சுபான்ஷு சுக்லா நீங்கள் தாய்நாட்டிலிருந்து வெகு தூரத்தில் இருக்கலாம். ஆனால், இந்தியார்களின் இதயங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறீர்கள். நலமாக இருக்கிறீர்களா...?" என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய சுபான்ஷு சுக்லா, ``பிரதமர் மோடி, உங்கள் அன்புக்கும் 140 கோடி இந்தியர்களின் அன்புக்கும் நன்றி. நான் இங்கே நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறேன். நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்.
இது ஒரு புதிய அனுபவம். இந்தப் பயணம் என்னுடையது மட்டுமல்ல, முழு தேசத்தின் பயணமும் ஆகும். உங்கள் தலைமையின் கீழ், இன்றைய இந்தியா அவர்களின் கனவுகளை நிறைவேற்ற ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. விண்வெளியில் உள்ள அனைத்தும் தரையில் பயிற்சி செய்வதிலிருந்து வித்தியாசமாக உணர்கிறது." என்றார்.