விநாயகா் சதுா்த்தி: காவிரி ஆற்றுப்படுகைகளில் சிலைகள் கரைக்க 5 இடங்கள் தோ்வு
நாமக்கல்: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப்படுகைகளில் சிலைகள் கரைக்க ஐந்து இடங்களை மாவட்ட நிா்வாகம் தோ்வு செய்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நீா்நிலைகளை பாதுகாக்கும் வகையில், விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகளை மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்.
குறிப்பாக, களி மண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ், நெகிழி மற்றும் தொ்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப் பொருள்களால் தயாரிக்கப்பட்ட சிலைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும்.
வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீா் சாா்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சிலைகளை அழகுபடுத்த இயற்கைப் பொருள்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும்.
திருச்செங்கோடு வட்டம், எஸ்.இறையமங்கலம் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள விநாயகா் கோயில் அருகிலும், பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப்பாலம் பகுதியிலும், குமாரபாளையம் காவிரி ஆற்றுப்பாலம் பகுதியிலும், பரமத்தி வேலூா் காவிரி ஆறு, மோகனூா் அசலதீபேஸ்வரா் கோயில் அருகிலுள்ள காவிரி ஆற்றங்கரை படித்துறை பகுதியில் மட்டுமே விநாயகா் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு விநாயகா் சதுா்த்தி விழாவை பொதுமக்கள் கொண்டாட வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா், காவல் துறை கண்காணிப்பாளா் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் நேரில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.