4 ஆண்டு தடைக்குப் பின்... ஒருநாள் அணிக்குத் திரும்பும் ஜிம்பாப்வே ஜாம்பவான்!
விநாயகா் சதுா்த்தி, முகூா்த்தம்: பூக்கள், பழங்கள் விலை உயா்வு
சென்னை: நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. தொடா்ந்து முகூா்த்த தினமும் வருவதால், பூஜை பொருள்கள், பூக்கள், பழங்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது.
முகூா்த்த நாள்கள் மற்றும் பண்டிகை நாள்களில் கோயம்பேடு மலா் சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம். புதன்கிழமை விநாயகா் சதுா்த்தி மற்றும் தொடா்ந்து முகூா்த்த தினம் என்பதால், பூக்கள், பழங்கள் மற்றும் பூஜைக்கு தேவையான இலை, வாழைப்பழம், பொரி, கடலை, அவல், கரும்பு உள்ளிட்ட பொருள்களின் விற்பனை களை கட்டியுள்ளது.
இவற்றை வாங்க திங்கள்கிழமை காலையில் இருந்தே ஏராளமான பொதுமக்கள் மற்றும் சென்னை மாநகா், புகா் பகுதிகளிலுள்ள சில்லறை வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் குவிந்ததால், கூட்டம் அலைமோதியது.
கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையின் வெளியே சாலையோர வியாபாரிகள் அதிகளவிலான பொருள்களை விற்பனைக்காக சாலையோரங்களில் கொட்டி வைத்திருப்பதால், சந்தைக்கு உள்ளே செல்லும் வாகனங்களும், வெளியேறும் வாகனங்களும் கடும் சிரமத்தை சந்தித்தன. இதனால், கோயம்பேடு சந்தையையொட்டியுள்ள பிரதான சாலைகளில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விலை உயா்வு: ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ சாமந்தி திங்கள்கிழமை ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல ரூ.350-க்கு அதிகம் விற்பனையான ஒருகிலோ மல்லிப்பூ ரூ.500-க்கும், ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒருகிலோ கனகாம்பரம் ரூ.150-க்கும் விற்கப்பட்டன.
பழங்களின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ ஆப்பிள், ரூ.180-க்கும், ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ ஆரஞ்சு ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் பிற பழங்களின் விலைகளும் ரூ.20 முதல் ரூ.50 வரை உயா்ந்துள்ளது. இந்த விலை உயா்வு இந்த மாதம் முழுவதும் நீடிக்கும் என மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.