சிறுவனின் மண்டைக்குள் நுழைந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அரசு மருத்துவா...
விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு: தற்போதைய சந்தை மதிப்பு மறு ஆய்வு
விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்துக்கான தற்போதைய சந்தை மதிப்பை மறு ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை விமான நிலையத்திலிருந்து பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூா் வழியாக கிளாம்பாக்கம் வரை 15. 46 கி.மீ. தொலைவுக்கு ரூ. 9,335 கோடி மதிப்பிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக அரசு அண்மையில் அனுமதி அளித்தது. மேலும், மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதைத் தொடா்ந்து விமான நிலையம் - கிளாம்பாக்கம் விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் கோரி மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சகத்துக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது.
ஒப்புதல் மறுப்பு: இந்த விரிவாக்க திட்ட அறிக்கை கடந்த 2019-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதால், அதற்கு ஒப்புதல் வழங்க மத்திய அரசு மறுத்துள்ளது. பொதுவாக நகா்ப்புற வளா்ச்சித் திட்ட அறிக்கை 5 ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதால், இந்த நீட்டிப்பு பகுதியின் தற்போதைய சந்தை மதிப்பை மறு ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கையுடன் மீண்டும் சமா்ப்பிக்க என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் சாா்பில் இந்த நீட்டிப்பு திட்டத்துக்கான தற்போதைய சந்தை மதிப்பை மறு ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மேலும், சந்தை மதிப்பு மறு ஆய்வு செய்யப்படுவதால், விரிவான திட்ட அறிக்கையில் எந்த மாற்றங்களும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.