விமான விபத்திலிருந்து தப்பியதும் செய்த முதல் வேலை? விஸ்வாஸ் குமார் பதில்
நான் எப்படி உயிர் பிழைத்தேன், இப்போது உயிருடன் இருக்கிறேன் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை என்று ஏர் இந்திய விமான விபத்தில் உயிர் பிழைத்த விஸ்வாஸ் குமார் கூறியிருக்கிறார்.
விமானம் விழுந்த போது, எனது இருக்கை விழுந்த இடத்தில் வெறும் தரை இருந்தது. திடீரென அவசர கால கதவு உடைந்து விழுந்தபோது, நான் அங்கிருந்து கீழே குதித்தேன்.. உயிர் பிழைத்ததை என்னால் நம்பவே முடியவில்லை என்று ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார் கூறியிருக்கிறார்.
அது மட்டுமல்ல, அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கிய அடுத்த நிமிடமே, அதிலிருந்து வெளியே வந்த விஸ்வாஸ் குமார், தனது பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து, தனது தந்தைக்கு போன் செய்து, விமானம் விபத்துக்குள்ளானதாகவும், தான் உயிர் பிழைத்துவிட்டேன் என்றும் கூறியிருந்ததாக அவரது உறிவனர் நயன் குமார் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
நேற்று பகலில், விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அனைத்தும் என் கண் முன்னே நடந்துள்ளது. ஆனால் நான் உயிர் பிழைத்திருக்கிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு நிமிடம், நான் இறந்துவிடுவேன் என்றுதான் நினைத்தேன்.
விமானம் புறப்படத் தொடங்கியபோதே பிரச்னை ஏற்பட்டது. திடீரென விளக்குகள் எரிந்தன. உடனே விமானம் வேகமாக இயங்கத் தொடங்கியது. அப்போதுதான் அது விழுந்தது. உடைந்து எரியத் தொடங்கியது.
எனது இருக்கை இருந்த பக்கம் நல்லவேளையாக காலி தரைப் பகுதி இருந்தது. அடுத்த பக்கம் கட்டடங்கள் இருந்ததால், அங்கிருந்த யாருமே வெளியேற முடியவில்லை. என் அருகில் இருந்த அவசர கதவு உடைந்ததால், நான் வெளியே குதித்துத் தப்பினேன். எனது கையிலும் தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்தவர்கள் உடனடியாக என்னைக் காப்பாற்றி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர் என்கிறார்.
எனது தந்தைக்கு, விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டதாகவும், தான் உயிர் பிழைத்திருப்பதாகவும் கூறியபோது, அவர், என்ன விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டதா என்று அதிர்ச்சியோடு கேட்டார். மேலும், எனது சகோதரரைக் காணவில்லை என்றும், வேறு யாரையுமே நான் பார்க்கவில்லை என்றும் கூறினேன் என்கிறார்.