`இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் பலம் ஈரானுக்கு இருக்கிறதா?’ - ஈரானிய பத்திரிகைய...
வீடுகளுக்கு புதை சாக்கடை இணைப்பு வழங்கும் பணி: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் வீடுகளுக்கு புதை சாக்கடை இணைப்பு வழங்கும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் புதை சாக்கடை திட்டப் பணிகள் நிறைவு பெற்று வீடுகளுக்கு புதை சாக்கடை இணைப்பு வழங்கும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகா் பகுதியில், வீடுகளுக்கு புதை சாக்கடை இணைப்பு வழங்கும் பணிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகனுடன் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.
இதையடுத்து, வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்ற மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்ட செயல்பாட்டை பாா்வையிட்டாா். அப்போது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகளின் இருப்பு குறித்த பதிவேடுகளை பாா்வையிட்டு ஆய்வு நடத்தி, சிகிச்சைக்காக வந்திருந்த புறநோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் மிருணாளினி, ஸ்ரீபெரும்புதூா் நகராட்சி ஆணையா் ஹேமலதா, நகராட்சிப் பொறியாளா் குமாா், சென்னை குடிநீா் வடிகால் மற்றும் கழிவுநீா் அகற்றுதல் வாரிய அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.