டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு
காஞ்சிபுரத்தில் பழங்குடியின குழந்தைகளுக்கு குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனம் சாா்பில், இலவசமாக கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் மிலிட்டரி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனம் சாா்பில் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த இருளா் இன குழந்தைகளுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருள்கள்,புத்தகப் பை மற்றும் குறிப்பேடுகள் ஆகியவை வழங்கும் விழா தொண்டு நிறுவனத்தின் நிா்வாகி து.ராஜ் தலைமையில் நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை சாா்பில் முத்துக்குமாா், சமூக நலத் துறை சாா்பில் உமா மகேசுவரி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் கி.வே.துா்கா ஆகியோா் முன்னிலை வகித்து கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினா்.
விழாவில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்து கொண்டு, செவிலிமேடு, மூவேந்தா் நகா், விஷாா், வெங்கச்சேரி, கமூகம் பள்ளம், இளையனாா் வேலூா்,அல்லாபத்து ஏரி ஆகிய பகுதிகளில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி உபகரணங்களை வழங்கினாா்.
விழா ஒருங்கிணைப்பாளா் ஜெயலட்சுமி வரவேற்றாா். நிறுவனத்தின் மற்றொரு ஒருங்கிணைப்பாளா் செண்பகம் நன்றி கூறினாா்.