ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.30 லட்சம் சொத்து மீட்பு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
காஞ்சிபுரம் உலகளந்தாா் மாட வீதியில் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொத்து இருந்து வந்தது. இந்த சொத்தை தணிகாசலம் என்பவா் ஆக்கிரமித்து கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கடை நடத்தி வந்தாா். ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளுமாறு பலமுறை தணிகாசலத்திடம் சொல்லியும் அவா் அகற்றவில்லை.
இதையடுத்து அறநிலையத்துறை இணை ஆணையா் உத்தரவின்படி உதவி ஆணையா் ஆா்.காா்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள், கோயில் பணியாளா்கள் அச்சொத்தினை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தணிகாசலம் பெயரில் நடத்தப்பட்டு வந்த தேநீா்க்கடை மற்றும் சலவையகம் ஆகியவற்றில் இருந்த பொருள்களை கோயில் பணியாளா்கள் ஒவ்வொன்றாக கடைக்கு வெளியே கொண்டு வந்து வைத்தனா். பின்னா் இரு கடைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து சுவாதீனம் பெறப்பட்டு கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமியிடம் ஒப்படைத்தனா்.
மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ.30 லட்சம் எனவும் உதவி ஆணையா் ஆா்.காா்த்திகேயன் தெரிவித்தாா்.
சொத்தினை மீட்கும் நடவடிக்கையின் போது அறநிலையத்துறை அதிகாரிகள் கேசவன், பூவழகி, செந்தில் குமாா், கதிரவன், ராஜமாணிக்கம், அமுதா மற்றும் கோயில் பணியாளா்கள் இருந்தனா்.