வெற்றிப் பாதைக்குத் திரும்பினாரா சூர்யா? ரெட்ரோ - திரை விமர்சனம்!
நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடியில் ரௌடியாக இருக்கும் திலகன் (ஜோஜூ ஜார்ஜ்) தன் மகன் பாரிவேல் கண்ணனுடன் (சூர்யா) இணைந்து தன் சாம்ராஜ்யத்தை பலமாக வைத்திருக்கிறார். அச்சூழலில் பாரிவேலின் திருமணம் நிகழ்வு ஆரம்பமாகிறது. பாரி தன் காதலி ருக்மணியுடன் (பூஜா ஹெக்டே) திருமண மேடையில் கனிமா பாடலுக்கு குத்தாட்டம் போடும்போது ஒரு பிரச்னை... ஆப்பிரிக்கா நாட்டிற்கு சொன்ன சரக்கை ஏன் கொண்டு செல்லவில்லை என ஜோஜு ஜார்ஜும் சூர்யாவும் சண்டையிட்டுக் கொள்ள திருமணம் நிற்கிறது. மீண்டும் தன் காதலி ருக்மணியை (பூஜா ஹெக்டே) சூர்யா சந்தித்தாரா? ஆப்பிரிக்காவுக்கு செல்ல வேண்டிய அந்த சரக்கு எங்கே இருக்கிறது? என்கிற கதையில் காதல், நகைச்சுவை, யுத்தம் மூன்றையும் இணைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
பெயரைப் போலவே பீரியட் படமாகவே உருவாகியிருக்கிறது ரெட்ரோ. முதல் சில காட்சிகளிலேயே கதைக்குள் கொண்டு செல்லப்படுவது சிறப்பு. அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறதை இறுதிவரை ஊகிக்க முடியாத அளவிற்குக் கதையையும் திட்டமிட்டுள்ளதால் முதல்பாதி முழுக்க சுவாரஸ்யமாகவே செல்கிறது.
வழக்கமான கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கெ உரித்தான ஒரு ’நியாயம்’ இப்படத்திலும் பேசப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த திரைப்படத்திலும் ‘கன்னிமா’ பாடலும் அதனுடன் நிகழும் காட்சிகளும் 15 நிமிட சிங்கிள் ஷாட்டில் அட்டகாசமாக எடுக்கப்பட்டிருந்தது. கார்த்திக் - பூஜா ஹெக்டே - சந்தோஷ் நாராயணன் கூட்டணி என இப்பகுதியை மட்டும் தனித்து கூறும் அளவிற்கு நல்ல திரையரங்க அனுபவம்.
ஆனால், கார்த்திக் சுப்புராஜ் ஏன் இந்தக் கதையைத் திரைப்படமாக எடுத்தார்? ஜகமே தந்திரம், ஜிகர்தண்டா - 2 ஆகிய இரண்டு படங்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட கதைபோல் இருக்கிறது. ஜிகர்தண்டா - 2 கிளைமேக்ஸுக்கும் ரெட்ரோ கிளைமேக்ஸுக்கும் சில வித்தியாசங்கள் மட்டுமே இருக்கின்றன.
திரைப்பட உருவாக்கத்தில் குயிண்டன் டாரண்டினோவை பல தமிழ் இயக்குநர்கள் காப்பியடித்தாலும் கார்த்திக் சுப்புராஜ் அதை நேர்த்தியாகத் தன் கதைகளுக்கு ஏற்ப மாற்றினார். ரெட்ரோவிலும் முதல் பாகத்தில், ‘ஆஹா’ என ஆரம்பிக்கும் பிரீயட் காலம் காட்சிகள் செல்ல செல்ல வலுவை இழப்பதுடன் இதையெல்லாம் விட சிறந்த காட்சிகளை கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கிவிட்டாரே என்கிற எண்ணமே எழுகிறது.
அதேபோல், இளம்வயது சூர்யாவின் ரயில் சண்டைக் காட்சியும் பின்னணி இசையும் ஆகா போட வைத்தாலும் படத்தில் ஏகப்பட்ட சண்டைகள் ஏன் வருகின்றன, இப்போது எதற்கு என சலிப்பைத் தருகின்றன. புத்தர் வன்முறையிலிருந்து விலகி அமைதியைப் போதித்தார். அமைதிக்குச் செல்லும் வரை வன்முறையே ஆயுதம் என்கிற மையப்புள்ளியை வைத்து இரண்டாம்பாதியெல்லாம் ‘சோதனை ஓட்டம்’போல் இருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜுக்கு கதையையும் அதன் கதாபாத்திரங்களையும் எப்படி கையாள வேண்டும் என நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆனால், நல்ல படத்தைக் கொடுக்க அதுமட்டும் போதுமா? திரைக்கதையைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும். நாம் ஏற்கனவே இக்கதையைத்தான் வேறு படத்தில் சொல்லிவிட்டோமே மீண்டும் ஏன் இதையே தூக்கிக்கொண்டு வர வேண்டும்? என்கிற கேள்விகளையையும் யோசித்திருக்கலாம்.
நடிகர் சூர்யாவுக்கு நல்ல கதாபாத்திரம். முதல்பாதியில் சிரிக்காமல் உர்ரென திரையை ஆக்கிரமிப்பவர் இரண்டாபாதியில் சுறுசுறுப்பாக இருப்பது ரசிகர்களை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. சில தோற்றங்களும் சூர்யாவுக்கு நன்றாகப் பொருந்திருப்பது திரையில் பார்க்க ரசிக்கும்படி இருந்தன. முக்கியமாக, சண்டைக் காட்சிகளில் தன் உடல்மொழியை அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
நடிகை பூஜா ஹெக்டே இதுவரை நடித்த எல்லா படங்களையும்விட இதில் அழகாக, கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் நடிகையாக மிளிர்கிறார். கனிமா பாடலாக இருக்கட்டும் தன் காதலனைவிட்டு விலகும் காட்சிகளாக இருக்கட்டும் ஒரு புதிய பூஜா ஹெக்டே தெரிகிறார். சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருப்பதால் போலித்தனங்கள் இல்லாத நல்ல கதாபாத்திரமாக எஞ்சுகிறார்.
நடிகர் ஜோஜு ஜார்ஜ் பேசும் வசனங்கள் மலையாள வாடை அடித்தாலும் வழக்கம்போல் நடிப்பில் தனியாகத் தெரிகிறார். நகைச்சுவையும் ஆக்சனையும் கையாளும் விதங்களும் நன்றாக இருந்தன. அதேபோல், நடிகர்கள் நாசர், ஜெயராம், விது உள்ளிட்டோரின் கதாபாத்திர வடிவமைப்புகள் கதையை சுவாரஸ்யமாக மாற்றுகின்றன.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையைக் கழித்துவிட்டால் இப்படத்திற்கு வலுவே இருக்காது என்கிற அளவிற்கு அட்டகாசமான இசைகளை வழங்கியிருக்கிறார். கனிமாவில் ஆட்டம்போடச் செய்யும் சந்தோஷ், சண்டைக் காட்சிகளிலும் தெறிக்கவிடுகிறார். சூர்யாவுக்கான மாஸ் பிஜிஎம்-கள் இப்படத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளன.
ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் தரமான ஒளிப்பதிவு, சண்டைப் பயிற்சியாளர் கேச்சா கம்பாக்டேவின் சண்டை ஒருங்கிணைப்புகள் என அனைத்து பணிகளும் சிறப்பாக இருந்தன.
ஆனால், முன்பே சொன்னதுபோல் வலுவான கதை இல்லாததால் எங்குமே உணர்வுப்பூர்வமாக ஒன்ற முடியவில்லை. சூர்யா யாரெனத் தெரிந்ததும் படத்தில் பல பேர் அழுகிறார்கள். நமக்கு எப்போது இக்காட்சி முடியும் என ஆகிவிட்டது. எமோஷனல் காட்சிகளைக் கூடுதல் கவனத்துடன் கார்த்திக் சுப்புராஜ் எழுதியிருக்கலாம்.
கங்குவாவின் தோல்விக்குப் பின் சூர்யாவுக்கு நல்ல படம் அமைய வேண்டும் என அவரின் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், இதுவும் கலவையான எண்ணங்கள் கொண்ட படமாகவே உருவாகியிருக்கிறது. படத்தின் கால அளவைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். மொத்தத்தில், கார்த்திக் சுப்புராஜிடமிருந்து ஒரு சுமாரான படம்.
இதையும் படிக்க: யார் அகதிகள்? சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி - திரை விமர்சனம்!