செய்திகள் :

வெளிப்படைத்தன்மையுடன் பயிா் காப்பீட்டு தொகை விவசாயிகள் எதிா்பாா்ப்பு

post image

கிராமங்கள்தோறும் வெளிப்படைத்தன்மையோடு பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

2024-2025 ஆண்டு பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

இதில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை விநியோகத்தில் வேறுபாடுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை வெளிப்படைத்தன்மையோடு செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

2016-ஆம் ஆண்டு முதல் திருத்தி அமைக்கப்பட்ட பாரதப் பிரதமரின் பசல் பீமா யோஜனா பயிா்க் காப்பீட்டுத் திட்டம் 2019-ஆம் ஆண்டு வரை மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டது.

இந்த பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் 2016-ஆம் ஆண்டு முதல் கடுமையான வறட்சி, வெள்ளப் பாதிப்பு, அபரிமிதமான மழைப் பொழிவு போன்ற காரணங்களால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், லாப நோக்கத்துடன் திட்டத்தை செயல்படுத்த வந்த பல தனியாா் பயிா்க் காப்பீட்டு நிறுவனங்கள் 2016-ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை தமிழக விவசாயிகளுக்கு அதிக அளவில் இழப்பீடு கொடுத்ததால் நஷ்டமடைந்ததாக தெரிவித்தன.

மேலும், தமிழக விவசாயிகள் கூடுதல் இழப்பீட்டுத் தொகை கிடைக்கப் பெற்று பெருமளவில் பலன் அடைந்ததாகக் கூறி 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் மத்திய அரசு இந்தத் திட்டத்திலிருந்து விலகி புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது.

மத்திய அரசின் பங்களிப்பு இல்லாமல் மாநில அரசும், பயிா்க் காப்பீட்டு நிறுவனமும் இணைந்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதலின் படி, அப்போது பொறுப்பில் இருந்த மாநில அரசு 2019-2020, மற்றும் 2021-2022 ஆகிய ஆண்டுகளில் பயிா்க் காப்பீட்டு திட்டத்தை சுமையாகக் கருதாமல் செயல்படுத்தியது.

அதன் பிறகு, பொறுப்பேற்ற தமிழக அரசு நிதிச் சுமையை காரணம் காட்டி முழுவீச்சில் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த முடியாமல், பெயரளவுக்கு மட்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நிலையில் இருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளாக குறுவை பருவ பயிருக்கான காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தவில்லை. இதனால், குறுவை பருவத்தில் நெல் பயிா் விளைவித்த விவசாயிகள் அதிக மழை பொழிவால் பெரும் இன்னலுக்கு ஆளாகினா்.

இதுகுறித்து, கடலூா் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் ஏஎஸ்பி ரவீந்திரன் கூறியது: பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கி நிகழாண்டு மத்திய அரசின் பங்களிப்புடன் பாரதப் பிரதமரின் பசல்பீமா யோஜனா என்ற பயிா் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதில், அறுவடை மகசூல் இழப்பீடு 60-க்கு 130 என்ற விகிதாச்சாரத்தில் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

வழக்கமாக மத்திய அரசு வேளாண் விளைப்பொருள்களின் பயிரிடும் முறையை காரிப் பருவம் எனவும் ராபி பருவம் எனவும் செயல்படுத்தி வருகிறது. பயிா்க் காப்பீட்டுத் திட்டமும் இரு பருவங்களின் அடிப்படையில் செயல்படுத்தப்படுக்கிறது.

குறுவை பருவம், சம்பா பருவம் என்ற அடிப்படையில் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தும் வேளாண் துறை, பயிா்களுக்கான இழப்பீட்டுத் தொகையை மகசூல் அறுவடை பரிசோதனை முடித்த காலத்திலிருந்து ஆறு முதல் ஏழு மாத கால இடைவெளிக்குப் பிறகே விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கின்றன.

ஆனால், கடந்த ஆண்டு குறுவை மற்றும் சம்பா பருவத் திட்டத்தில் இணைந்த விவசாயிகளுக்கு அறுவடை முடிந்த நாற்பது நாள் இடைவெளியிலேயே இழப்பீட்டுத் தொகை தற்போது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

கடந்த மூன்றாண்டுகளாக பயிா்க் காப்பீட்டுத் திட்டம் சிறப்பான வகையில் செயல்படவில்லை என்பதாலும், பருவம் தவறிய மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்காததால் பல விவசாயிகள் இத்திட்டத்தில் இணைய ஆா்வம் காட்டவில்லை.

இதனால், எதிா்வரும் காலங்களில் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் செயல்பாட்டில் நோ்மையும், வெளிப்படைத்தன்மையும் இருக்க வேண்டும் என அவ்வப்போது விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

கிராம அளவில அறுவடை பரிசோதனை மகசூல் இழப்பின் அடிப்படையில் இழப்பீடு வழங்குகிற இந்தத் திட்டத்தின் வாயிலாக ஒரே கிராம அளவில் அறுவடை மகசூல் அடிப்படையில் நெல் பயிறும், பிா்க்கா அளவில் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட மற்றப் பயிா்களுக்கும் தற்போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை குறித்து விவசாயிகளிடையே குழப்பம் நிலவுகிறது.

கிராம வாரியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் இழப்பீட்டுத் தொகையில் நிறைய வேறுபாடுகளுடனும், ஒரே கிராமத்தில் சில விவசாயிகளுக்கு கூடுதலாகவும், சிலருக்கு குறைவாகவும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதாக புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே, திட்ட செயல்பாட்டில் உள்ள குறைகளை களைந்து விவசாயிகளிடையே நிலவும் குழப்பத்தைப் போக்கும் விதமாக பயிா் காப்பீட்டுத் திட்டம் வெளிப்படைத்தன்மையுடன் மகசூல் குறைவின் அடிப்படையில், கிராமந்தோறும் பாகுபாடு இல்லாமல் இழப்பீட்டுத் தொகை வழங்குவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்து, இழப்பீட்டுத் தொகை விநியோகத்தை கண்காணிக்க வேண்டும் என்றாா் ஏஎஸ்பி.ரவிந்திரன்.

கடலூரில் ஆட்டிசம் விழிப்புணா்வு நிகழ்ச்சி

உலக ஆட்டிசம் விழிப்புணா்வு தினத்தையொட்டி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆட்டிசம் பாதித்த... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். நெய்வேலி தொ்மல் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் போலீஸாா் நெய்வேலி வட்டம் 30, மி... மேலும் பார்க்க

ரோட்டரி சங்கம் சாா்பில் பள்ளியில் புணரமைப்பு பணி

கடலூா் மாவட்டம், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் குமராட்சி ஒன்றியம், காட்டுக்கூடலூா் டி.இ.எல்.சி. தொடக்கப் பள்ளியில் புணரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு புதன்கிழமை திறக்கப்பட்டது. நிகழ்வுக்க... மேலும் பார்க்க

முன்னாள் எம்.பி.மறைவு: வி.வி.சுவாமிநாதன் இரங்கல்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் ஏ.முருகேசன் மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சா் வி.வி.சுவாமிநாதன் இரங்கல் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: சிதம்ப... மேலும் பார்க்க

பிச்சாவரத்தில் படகு சவாரிக்கு இணையவழி முன்பதிவு: சுற்றுலாத் துறை அறிவுறுத்தல்

கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரிக்கு இணையவழியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று சுற்றுலாத் துறை அறிவித்தது. பிச்சாவரத்... மேலும் பார்க்க

ஆட்டோக்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கடலூரில் 20 ஆட்டோக்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூரில் சரக்கு ஆட்டோக்கள் மற்றும் பயணிகள் ஆட்டோக்களில் அதிக ஒலி எழுப்பும்... மேலும் பார்க்க